வெல்லிங்டன்: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் எந்தவொரு வீரரோ அல்லது வீராங்கனையோ செய்யாத ஒரு மகத்தான சாதனையை நியூசிலாந்து வீராங்கனை அமீலியா கெர் படைத்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சமபலத்துடன் அசத்தி வரும் அவர், டி20 போட்டிகளில் அதிக நிலைத்தன்மையுடன் ரன்களைக் குவித்தவர் என்ற புதிய உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
வெல்லிங்டனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆவது டி20 போட்டியில் அமீலியா கெர் 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் (ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவிலும்) தொடர்ந்து 10 இன்னிங்ஸ்களில் 30 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து மற்றும் ரெபெக்கா பிளேக் ஆகியோர் தலா 9 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து 30 ரன்களுக்கு மேல் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை அமீலியா கெர் முறியடித்துள்ளார்.

இந்தச் சாதனைப் பயணம் 2024 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலிருந்து தொடங்கியது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 40, 66 ரன்கள் எனத் தொடர்ந்து ரன் வேட்டையாடினார். 2026 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து தனது முதல் டி20 சதத்தைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தற்போதைய தொடரில் 78, 32, 30 மற்றும் 31 ரன்கள் எனத் தனது 10 ஆவது தொடர்ச்சியான 30+ ஸ்கோரை எட்டியுள்ளார்.
தனது கடைசி 11 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 554 ரன்களைக் குவித்துள்ளார் அமீலியா கெர். இவரது ஸ்ட்ரைக் ரேட் 142 ஆக உள்ளது. பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவரது பந்துவீச்சு எகானமி 6.74 ஆகும்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் சோபி டிவைன் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
