கான்பூர்: ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரராக இருந்த அமித் மிஸ்ரா மீது அவரது மனைவி கரிமா திவாரி வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை புகாரை அளித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நீதிமன்றத்தில் இந்த புதிய புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தியதாக கரிமா திவாரி அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக விளையாடிய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா அல்ல. இந்த புகாருக்கு ஆளாகி இருக்கும் அமித் மிஸ்ரா உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரத்தை சேர்ந்தவர். மித வேகப் பந்துவீச்சாளரான இவர் உத்தர பிரதேச மாநில அணிக்காக கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை.

கரிமா திவாரி அளித்துள்ள புகாரின்படி, கிரிக்கெட் வீரரும், தற்போது ரிசர்வ் வங்கியின் அதிகாரியாகப் பணிபுரியும் அமித் மிஸ்ராவும் அவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அதன் பிறகு இருவரும் சுமார் மூன்றாண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி கான்பூர் கிளப்பில் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, அமித் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கார் வேண்டும் என்று வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தத் தொடங்கியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கரிமா திவாரியின் குடும்பத்தினர் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆனால், மேலும் பணம் கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தல்கள் நடந்துள்ளன.
மதுபோதையில் அமித் மிஸ்ரா தன்னைத் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், சில நேரங்களில் பல நாட்களாக உணவு கூட வழங்காமல் அடைத்து வைத்ததாகவும் கரிமா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாடலிங் தொழில் மூலம் தான் சம்பாதித்த பணத்தையும் தனது கணவர் பறித்துக்கொண்டார் என்றும், விவாகரத்து செய்துவிடுவதாகத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரில் அமித் மிஸ்ரா மட்டுமின்றி அவரது தாய் பீனா மிஸ்ரா, தந்தை சஷிகாந்த் மிஸ்ரா, சகோதரர் அமர் மிஸ்ரா, மைத்துனி ரிது மிஸ்ரா மற்றும் சகோதரி ஸ்வாதி மிஸ்ரா ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த தொடர் துன்புறுத்தல்களால் மன அழுத்தத்திற்கு ஆளான கரிமா, தனது மாடலிங் தொழிலையும் கைவிட்டுள்ளார். ஒருகட்டத்தில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். காவல்துறை ஆணையர் அலுவலகம் உட்பட காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், அமித் மிஸ்ராவின் செல்வாக்கு காரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று கரிமா தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தற்போது தனது வழக்கறிஞர் கரீம் அகமது சித்திகி மூலம் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஏற்கனவே அமித் மிஸ்ரா மீது கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி குடும்ப வன்முறை வழக்கும், ஏப்ரல் 23 ஆம் தேதி மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் மற்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மற்றொரு வழக்கும் கரிமா தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக வரதட்சணை கொடுமை வழக்கை அவர் தொடர்ந்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.