மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரின் 'ஹாட்ரிக் நாயகனுமான' அமித் மிஸ்ரா, தனது 25 ஆண்டு கால நீண்ட தொழில்முறை கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியான காயங்கள் காரணமாகவும், இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கிலும், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்துப் பேசிய அமித் மிஸ்ரா, "கிரிக்கெட்டில் எனது இந்த 25 ஆண்டு கால வாழ்க்கை மறக்க முடியாதது. இந்த நெடிய பயணத்தில் எனக்கு ஆதரவளித்த பிசிசிஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், சக வீரர்கள், பயிற்சிக் குழுவினர், எனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் களத்தில் இருந்த ஒவ்வொரு தருணமும் என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் போற்றப்படும் நினைவுகள்," என்று கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடியதை விட, ஐபிஎல் தொடரில்தான் அமித் மிஸ்ராவின் புகழ் உச்சிக்குச் சென்றது. ஐபிஎல் வரலாற்றில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் இவர்தான். டெல்லி டேர்டெவில்ஸ் (2008), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011), மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013) என மூன்று வெவ்வேறு அணிகளுக்காக இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியிருப்பது பிரமிக்க வைக்கிறது. மொத்தமாக 162 ஐபிஎல் போட்டிகளில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
2003-ல் ஒருநாள் போட்டியிலும், 2008-ல் டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவிற்காக அறிமுகமானார் மிஸ்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2013-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜவகல் ஸ்ரீநாத்தின் உலக சாதனையைச் சமன் செய்தார். 2014 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் அவரது பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், அதிலிருந்து முழுவதுமாக விலகப் போவதில்லை என்று அமித் மிஸ்ரா கூறியுள்ளார். பயிற்சி, வர்ணனை மற்றும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டுதல் போன்றவற்றில் ஈடுபட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.