ஆக்லாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஹாரிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது கிரிக்கெட் வர்னணையாளராக இருந்து வருகிறார் கிறிஸ். நியூசிலாந்தின் முன்னணி ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர் ஹாரிஸ். இவர் நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியிலிருந்து சில வரிகள்...
நியூசிலாந்துக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்துள்ளமிகச் சிறந்த ஆல் ரவுண்ட் அணி இதுதான். இந்த அணியால் உலகக் கோப்பையை வாங்க முடியாவிட்டால் வேறு எந்த அணியாலும் வாங்க முடியாது.
நடப்பு நியூசிலாந்து அணியில் அனைத்துத் திறமைகளும் இடம் பெற்றுள்ளன. மிகச் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியாக இது உள்ளது. சில தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட, மிகச் சிறந்த அணிதான் இது.
அணியின் ஒற்றுமை மிகச் சிறப்பாக உள்ளது. பயிற்சி சிறப்பாக உள்ளது. ஆனால் எல்லாவற்றையும் விட பிரன்டன் மெக்கல்லமின் கேப்டன் பணிதான் மிக மிக சிறப்பாக உள்ளது. அதிரடியாக விளையாடுகிறார், செயல்படுகிறார் மெக்கல்லம்.
அருமையாக தலைமை தாங்குகிறார். அவர் பேட் செய்யும் விதம், நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் தானே முன்வந்து அதை சரி செய்வது என சிறந்த கேப்டனாக அவர் திகழ்கிறார்.
இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத வேண்டும் என்பது எனது விருப்பம். அப்படி ஒரு மோதல் வந்தால் அது மிகச் சிறந்த விருந்தாக அமையும் என்றார் ஹாரிஸ்.