டோணியாக மாறிய விஸ்வநாதன் ஆனந்த்!
டெல்லி: டென்னிசில் ரோஜர் பெடரர், கிரிக்கெட்டில் கேப்டன் கூல் டோணி போல, வயசானாலும் உங்க ஸ்டைல் உங்களைவிட்டு போகல' என்று சொல்ல வைத்துள்ளார் கிங் ஆப் செஸ் விஸ்வநாதன் ஆனந்த்.
உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 48 வயதாகும் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் தான் விளையாடிய 17 ஆட்டங்களில் அவர் தோல்வியடையாமல் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்த், 2003ல் உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்றார். 14 ஆண்டு வனவாசத்துக்கு பிறகு மீண்டும் மகுடம் சூட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், ஓய்வு பெற்றுவிடலாமே என்று ஆனந்த் குறித்து பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், உலக ராபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று, சாதிக்க வயது ஒரு பொருட்டே இல்லை என்பதை ஆனந்த் நிரூபித்துள்ளார்.
டென்னிசில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சகாப்தம் முடிந்து விட்டது என்று எல்லோரும் கூறியபோது, 35வது வயதாகும் அவர் இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தினார்.
36 வயதாகும் கேப்டன் கூல் டோணிக்கு எதிராகவும் இதுபோன்ற விமர்சனங்கள் வந்தன. மின்னல் வேக விக்கெட் கீப்பிங், அதிரடி ரன் குவிப்பு, தன்னைவிட வயதில் குறைந்தவர்களைவிட வேகமாக ஓடும் திறன் என, சைலண்டாக பதிலளித்தார் டோணி.
செஸ் என்பது தனிநபர் விளையாட்டு என்பதால், தன் மீதான விமர்சனங்களுக்கு தான் மட்டுமே பதிலளிக்க முடியும் என்ற நிலையில், டோணியின் விவேகம், பெடரரின் துல்லியம் ஆகியவற்றுடன் தனக்கே உள்ள தனிப்பட்ட திறமைகளை காட்டி, மீண்டும் சதுரங்க வேட்டையை ஆனந்த் துவக்கியுள்ளார்.
Story first published: Tuesday, January 2, 2018, 12:03 [IST]
Other articles published on Jan 2, 2018


Click it and Unblock the Notifications