லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், விராட் கோஹ்லி மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் இடையேயான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோஹ்லியை எப்படி அவுட்டாக்குவது என்பது புரியாமல் ஆன்டர்சன் திணறுகிறார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் 31 ரன்களில் இங்கிலாந்து வென்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
கடந்த 2014ல் நடந்த தொடரின்போது, 10 இன்னிங்ஸ்களில் 4 முறை கோஹ்லியை அவுட்டாக்கினார் ஆன்டர்சன். இந்த முறையும் கோஹ்லியை ஆன்டர்சன் திணறடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் தொடரில் மூன்று இன்னிங்ஸ் விளையாடியுள்ள கோஹ்லி, ஆன்டர்சன் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டார்.
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு பேசிய ஆன்டர்சன், மற்றவர்களைப் போல கோஹ்லியை ஏன் அவுட்டாக்க முடியவில்லை என்று யோசிக்க வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கோஹ்லி தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார். அவருக்கு எதிராக பந்து வீசுவது, அவரைக் கட்டுப்படுத்துவது என்பது சுவாரசியமாகவே உள்ளது. இதனால் எனக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும், இந்தத் தொடரின் அடுத்த இன்னிங்ஸ்களில் கோஹ்லியை அவுட்டாக்க முயற்சிப்பேன் என்று ஆன்டர்சன் கூறியுள்ளார்.