காக்கிநாடா: "எனக்கு பேட்டிங் தர்றீங்களா... இல்ல கிரிக்கெட் கிரவுண்டையே விவசாய நிலமா மாத்தவா?" என ஆந்திராவில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத கடுப்பில், நபர் ஒருவர் டிராக்டரை விட்டு மைதானத்தை உழுத சம்பவம் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்து கிரிக்கெட் என்றாலே தனி ரகம்தான். அங்கே ஐசிசி ரூல்ஸ் எல்லாம் செல்லுபடியாகாது. "பேட் என்னுடையது, அதனால் நான் தான் ஓப்பனிங் இறங்குவேன்", "முதல் பாலு ட்ரையல் பாலு" என அங்கே எழுதப்படாத சட்டங்கள் தான் அதிகம். சண்டைகளும் சச்சரவுகளும் சகஜம் தான். ஆனால், ஆந்திர பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம், 'தெரு கிரிக்கெட்' வரலாற்றிலேயே இல்லாத ஒரு சம்பவம்.
ஆந்திராவின் ஒரு கிராமத்தில் விடுமுறை நாளான நேற்று, உள்ளூர் இளைஞர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். நட்பு ரீதியான போட்டி என்பதால் அனைவரும் பேட்டிங் செய்ய ஆவலாக இருந்தனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் நீண்ட நேரமாகியும் பேட்டிங் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

விக்கெட்டுகள் விழும்... நமக்கு சான்ஸ் வரும் எனத் தவம் கிடந்த அந்த நபருக்கு, இன்னிங்ஸ் முடியும் வரை பேட்டிங் கிடைக்கவில்லை. "எல்லாரும் ஆடிட்டீங்க... என்னை மட்டும் ஓரம் கட்டிட்டீங்களே" என்ற ஆதங்கத்தில் அவர் அங்கிருந்து கிளம்பினார்.
சரி, கோபித்துக்கொண்டு வீட்டுக்குப் போயிருப்பார் என்று நினைத்தால், அதுதான் தவறு. சிறிது நேரத்தில் ஒரு பெரிய டிராக்டரை ஓட்டிக்கொண்டு அந்த நபர் மைதானத்திற்குள் நுழைந்தார். பேட்டிங் கிடைக்காத ஆத்திரத்தில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அந்த மைதானம் என்றும் பார்க்காமல், டிராக்டரை வைத்து நிலத்தை உழத் தொடங்கினார்.
திடீரென மைதானத்திற்குள் டிராக்டர் புகுந்து உழுவதைப் பார்த்த மற்ற வீரர்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். "விளையாடக் கூப்பிட்டா, இவன் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டானே!" எனச் செய்வதறியாமல் திகைத்தனர். அந்த நபர் மைதானத்தை உழுது தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து என்ற கிராமத்து கிரிக்கெட் சார்ந்த தமிழ் திரைப்படம் ஒன்றிலும் இதுபோன்ற ஒரு காட்சி இருந்தது. அதில் கணவன் வீட்டை பார்க்காமல், கிரிக்கெட் ஆடுவதை அறிந்த மனைவி, டிராக்டரை வைத்து பிட்ச்சை உழுது விட்டு செல்வார். கிட்டத்தட்ட அதே போன்ற சம்பவம் தான் இங்கேயும் அரங்கேறியது.
ஆந்திர நபரின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "இதுதான்யா சரியான கிராமத்து கிரிக்கெட் சண்டை" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். "பேட்டிங் தரலனா ஸ்டம்ப்பை பிடுங்கிட்டு போறவங்களை பார்த்திருக்கோம்.. இப்படி கிரவுண்டையே உழுதவனை இப்பதான் பார்க்குறோம்" என கலாய்த்து வருகின்றனர்.
எது எப்படியோ, பேட்டிங் கிடைக்காத கடுப்பை வெளிப்படுத்த எத்தனையோ வழி இருக்க, இப்படி டிராக்டர் விட்டு மொத்த விளையாட்டையும் காலி செய்த சம்பவம், ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது!