மும்பை:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஆண்ட்ரூ ரசல், தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவு அடைந்துள்ளன. ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது.
மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் நாளை மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் டெல்லி-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது கொல்கத்தா அணி. அந்த அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஆண்ட்ரூ ரசல் விளையாடி வருகிறார். அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், அவர் கூறியிருப்பதாவது: இந்தி பாடல் ஒன்றின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளேன். அந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் அவர், தமது அதிரடி ஆட்டத்தின் வழியாக ஐபிஎல் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தற்போது கிரிக்கெட்டுடன் சினிமாவிலும் அவர் புகுந்துள்ளது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.