மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 62 வயதான வீரர் ஒருவர் அறிமுகமாகி மாபெரும் சாதனை படைத்திருக்கிறார். கோஸ்டாரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பால்க்லாந்து தீவுகள் அணி விளையாடியது.
இந்த தொடரில் பால்க்லாந்து தீவுகள் அணிக்காக ஆண்ட்ரூ பிரவுன்லீ என்ற 62 வயது வீரர் அறிமுகமானார். இதன் மூலம் ஆறு ஆண்டு சாதனை ஒன்றை அவர் முறியடித்து இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு துருக்கி அணியைச் சேர்ந்த உஸ்மான் கோகர் என்பவர் 59 வயதில் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகியிருந்தார். அதுவே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு அறிமுக வீரரின் மிக அதிக வயதாக இருந்தது.

அந்த சாதனையை ஆண்ட்ரூ பிரவுன்லீ முறியடித்து இருக்கிறார். கோஸ்டா ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் பிரவுன்லீ விளையாடினார். வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும், வலது கை பேட்ஸ்மேனாகவும் அவர் செயல்பட்டார்.
இந்த மூன்று போட்டிகளில் அவர் மொத்தம் 6 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறார். அதில் இரண்டு போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அதில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. வீரர்கள் இல்லாததால் இவர் பால்க்லாந்து தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டாரா? அல்லது கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் அந்த அணியில் இடம் பெற்று ஆடி வருகிறாரா? என்பது தெரியவில்லை.
எனினும், சர்வதேச கிரிக்கெட் அமைப்பு அனைத்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளையும் அங்கீகரித்து இருப்பதால், அந்த அணிகள் தங்களுக்குள் விளையாடும் டி20 போட்டிகள் அனைத்தும் சர்வதேச டி20 போட்டிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த அணிகள் ஒரு நாள் போட்டிகளையோ, டெஸ்ட் போட்டிகளையோ சர்வதேச அங்கீகாரத்துடன் விளையாட முடியாது.

டி20 வடிவத்துக்கு மட்டும் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இந்த விதியை அமல்படுத்தி இருக்கிறது. அதனால் தான் இது போல பல கத்துக்குட்டி அணிகளும் சர்வதேச போட்டியில் விளையாடி, இது போன்ற விசித்திரமான சாதனைகளை செய்து வருகின்றன. எனினும், 62 வயதில் ஒரு நாட்டின் தேசிய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகப்பெரிய சாதனைதான். அந்த வகையில் ஆண்ட்ரூ பிரவுன்லீக்கு நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.