லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவானும், அதிரடி ஆல்-ரவுண்டருமான ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், 'தி ஹன்ட்ரட்' தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். இது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் புதிய இந்திய உரிமையாளர்களான சன் டிவி குழுமத்துடன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்கள்) சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருப்பது, இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கி உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 47 வயதான ஃபிளின்டாஃப் நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. 'டாப் கியர்' என்ற சாகச நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட உயிருக்கே ஆபத்தான விபத்திலிருந்து மீண்டு வந்து, அவர் ஏற்றக்கொண்ட முதல் பெரிய பொறுப்பும் இதுதான்.
ஃபிளின்டாஃபின் முதல் சீசனான 2024-ல், சூப்பர்சார்ஜர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு அதைவிட ஒருபடி முன்னேறி, மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியது. ஆனாலும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், சன் குழுமம் சுமார் 100 மில்லியன் பவுண்டு (சுமார் 1200 கோடி) கொடுத்து சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் 100% பங்குகளை வாங்கியது. சன் டிவி குழுமத்துடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய ஃபிளின்டாஃப், தனது விலகலுக்கான காரணத்தைப் பதிவு செய்தார். தற்போது ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் சார்ந்த செயல்பாடுகளை சன் குழுமத்தின் காவ்யா மாறன் தான் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"அவர்கள் என்னை பயிற்சியாளராகத் தொடர வேண்டும் என்றார்கள். நானும் ஆஃபரைச் சொல்லுங்கள் என்றேன். நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை. ஆனால், மற்ற தலைமைப் பயிற்சியாளர்களின் சம்பளத்தில் கால் பங்கை விட சற்று அதிகமாகவே எனக்கு வழங்கப்பட்டது. ஒரு மதிப்பு வேண்டும் அல்லவா? இது எனக்குச் சரிபட்டு வராது என்று நான் கூறிவிட்டேன். அவர்களும் அதை மாற்றுவதாக இல்லை. அதனால், நான் விலகுகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் ஒரு நல்ல அணியைக் கட்டமைத்து வந்தோம். அதை முழுமையாகக் கொண்டு செல்ல முடியாதது வருத்தமளிக்கிறது" என்று தனது வேதனையைப் பதிவு செய்தார்.
ஆனால், ஃபிளின்டாஃபின் இந்தக் குற்றச்சாட்டை சன்ரைசர்ஸ் குழுமம் மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய சன்ரைசர்ஸ் செய்தித் தொடர்பாளர், "நாங்கள் ஃபிளின்டாஃப்புடன் பேசினோம். அவரது தற்போதைய சம்பளத்தை விட அதிக ஊதியத்தை வழங்க முன்வந்தோம். அவர் எங்களுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால், அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம்" என்று விளக்கமளித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினை காரணமாக ஃபிளின்டாஃப் வெளியேறியிருப்பது, நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், அவரது சொந்த ஊரான மான்செஸ்டரில் உள்ள மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.