லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஆண்ட்ரூ பிளின்டாஃப், தான் WWE (World Wrestling Entertainment)-ல் சேருவதற்காக மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டதாகவும், WWE ஜாம்பவான் 'தி அண்டர்டேக்கருடன்' தனது சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே மோதும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆச்சரிய தகவலை கூறி உள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு குத்துச்சண்டையில் ஈடுபட்ட பிளின்டாஃப், WWE-ல் இணையாமல் போனதற்கான காரணத்தையும் விளக்கினார்.
"துபாயில் இருந்தபோது, நான் உடல் தகுதியற்றவனாகவும், உடல் எடை கூடியவனாகவும் இருந்தேன். ஒரு நல்ல நிலையில் நான் இல்லை. மீண்டும் உடல் தகுதியைப் பெற விரும்பினேன், ஆனால் எனக்கு ஒரு உத்வேகம் தேவைப்பட்டது. சிறுவயதில் இருந்தே நான் WWE-யை மிகவும் விரும்புவேன். அதனால், ஸ்கை தொலைக்காட்சியுடன் 'லீக் ஆஃப் தேர் ஓன்' (League of their own) என்ற நிகழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தபோது, மான்செஸ்டரில் அண்டர்டேக்கருடன் மோதுவது என்ற யோசனையை நான் அவர்களிடம் முன்வைத்தேன்," என்று பிளின்டாஃப் தெரிவித்தார்.

அண்டர்டேக்கருடன் மோதுவதாக கூறிய பின் WWE பயிற்சி மையத்தில் தான் பயிற்சி பெற்றதாகவும், பயிற்சியின் இரண்டாம் நாளிலேயே தனது உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் பிளின்டாஃப் கூறினார். "நான் உள்ளே சென்றதும், வார்ம்-அப்கள் செய்தோம். பின்னர் மூன்று மணி நேரம் என்னை ரிங்கில் நிறுத்தி, கயிறுகளின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஓட வைத்தார்கள். இடையே நான் ஒருவரை நோக்கி ஓடினால், அவர் என்னை தூக்கி எறிவார். இரண்டாம் நாள் நான் அங்கு சென்றபோது, என் முதுகில் காயங்கள் இருந்தன. என் மனைவி, 'இதெல்லாம் உனக்கு சரிப்படுமா?' என்று கேட்டாள். எனக்கு வலித்தது, ஏதோ சரியில்லை என்று தோன்றியது," என்று அவர் கூறினார்.
பின்னர், WWE-ல் சேருவதற்கு மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டதாகவும், ரெஸ்ஸில்மேனியா (Wrestlemania) மற்றும் ராயல் ரம்பிள் (Royal Rumble) போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் விரைவாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததாகவும் பிளின்டாஃப் தெரிவித்தார். ஆனால், தனது குழந்தைகள் கிரிக்கெட் விளையாட விரும்பியதால், அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பாததால், WWE-ல் சேரும் முடிவை அவர் கைவிட்டார்.
"இரண்டு வாரங்களுக்குப் பிறகு, WWE-யிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. 'உங்கள் ஆவணப்படத்தை நீங்கள் செய்ய முடியாது, ஏனெனில் நீங்கள் ரகசியங்களை வெளிப்படுத்திவிடுவீர்கள், நாங்கள் உங்களுக்கு மூன்று வருட ஒப்பந்தம் வழங்க விரும்புகிறோம்' என்று அதில் இருந்தது. 'உங்களை விரைவாக முன்னேற்றி, 18 மாதங்களில் ரெஸ்ஸில்மேனியா மற்றும் ராயல் ரம்பிளில் பங்கேற்க வைப்போம்' என்று அவர்கள் கூறினர். பணம் மிக அதிகமாக இருந்தது."
"ஆனால், நாங்கள் துபாயிலிருந்து திரும்பி வர விரும்பினோம். குழந்தைகள் கிரிக்கெட் விளையாட விரும்பினர், அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பவில்லை. அதனால் நான் அதை குத்துச்சண்டை வீரராக மாறி, ஒரு போட்டியில் விளையாடினேன்" என்று முன்னாள் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாஃப் கூறினார்.
பிளின்டாஃப் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட், 141 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3845 ரன்களையும், 226 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3394 ரன்களையும், 169 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். தற்போது அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.