வாஷிங்டன்: வாஷிங்டன் ப்ரீடம் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர் ரஸல் அடித்த சிக்சர், சிறுவனின் தலையை பதம் பார்த்தது. இதன்பின் சிறுவனை சந்தித்து ரஸல் ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் முதல்முறையாக ஐபிஎல் தொடர் போல் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கேகேஆர் அணியின் இன்னொரு பிரிவான லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியும் பங்கேற்றுள்ளது. கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் தான் இந்த அணியையும் வாங்கியுள்ளார். கேகேஆர் அணி ஏற்கனவே சிபிஎல், டி20 லீக் உள்ளிட்ட தொடர்களிலும் முதலீடு செய்துள்ளது.

இந்த நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் லாஸ் ஏஞ்சலஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனை மாற்ற வாஷிங்டன் ப்ரீடம் அணியுடனான போட்டியில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் முதல் பேட்டிங் விளையாடிய லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் ஆன்ட்ரே ரஸஸ், ரூஸோவ் உடன் இணைந்து ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். சிறப்பாக ஆடிய ரஸல் 37 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் சேர்த்து 70 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.
இதனிடையே ரஸல் அடித்த ஒரு சிக்சர் பந்து, மைதானத்தில் இருந்த சிறுவனின் தலையை பதம் பார்த்தது. சிறுவன் வலியில் துடித்ததால், உடனடியாக முதலுதவி செய்யப்பட்டுள்ளது. இதனால் சோகமடைந்த ரஸல், ஆட்டம் முடிவடைந்த பின் சிறுவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல் பந்து தலையில் அடித்த பகுதியையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து சிறுவனின் ஆசைகளை கேட்டறிந்த ரஸல், சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஏராளமான ஆட்டோகிராஃபும் அளித்தார். இதனால் சிறுவன் மகிழ்ச்சியடைந்து விடைபெற்று கொண்டார். இந்த வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.