கொழும்பு: மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், 386 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இலங்கை அணி 268 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால், 117 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்தது. இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் சதம் அடித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்தும், கடைசி கட்டத்தில், இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்டில் தோல்வியையும் இரண்டாவது டெஸ்டில் வெற்றியும் அடைந்தது. இத்தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தியா தனது முதல் இன்னிங்சில் 312 ரன்களும், இலங்கை 201 ரன்களும் எடுத்தன. நேற்றுமுன்தினம் தனது 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா நேற்று தேனீர் இடைவேளை நேரத்தில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எனவே இலங்கைக்கு 386 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
இலங்கை தனது 2வது இன்னிங்சில் நாலாம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து தடுமாறி வந்தது. உபுல் தரங்கா, கருணரத்னே ஆகியோர் டக்-அவுட்டான நிலையில் சண்டிமால் 18 ரன்களில் வெளியேறினார். கேப்டன் மேத்யூஸ் மற்றும் குஷால் சில்வா ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இன்று ஒருநாளே எஞ்சியிருந்த நிலையில் இலங்கையால் இந்த ஸ்கோரை எட்டுவது மிக கடினம் என்பதால் உணவு இடைவேளைக்கு முன்பாக இந்தியா வெற்றியை ருசித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
குஷால் சில்வா 27 ரன்களிலும், அடுத்து இறங்கிய திரிமன்னே 12 ரன்களிலும் வெளியேற்றப்பட்டாலும், கேப்டன் மேத்யூஸ் மற்றும் குஷால் பெரேரா ஆகியோர் தடுப்பு ஆட்டத்தில் இறங்கினர். இவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர்.
அணியின் ஸ்கோர் 107ஆக இருந்தபோது 6வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி, ஸ்கோர் 242ஆக உயர்ந்தபோதுதான் பிரிந்தது. இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது. குஷால் பெரேரா 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தேனீர் இடைவேளையின்போது, இலங்கை அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து வலுவாக காணப்பட்டது. அந்த அணி கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்களுடன் களத்தில் நின்றதால் ஆட்டம் டிரா ஆகும் சூழ்நிலை இருந்தது.
ஆனால் தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் முற்றிலுமாக இந்தியா பக்கம் மாறியது. இஷாந்த் வீசிய பந்து வீச்சில் மேத்யூஸ் மேற்கொண்டு ரன் எடுக்காமல் 110 ரன்களில் அவுட் ஆனார். இதன்பிறகு வந்த 'டெய்ல் என்ட்' பேட்ஸ்மேன்களை வரிசையாக நடையை கட்டச் செய்யும் பொறுப்பை அஸ்வின் ஏற்றார்.
இதனால், அந்த அணி 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இலங்கை மண்ணில் இந்திய அணி 22 வருடங்களுக்கு பின்னர் தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது இதில் சிறப்பு.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள், இஷாந்த் ஷர்மா 3, உமேஷ் யாதவ் 2 மற்றும் அமித் மிஸ்ரா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது முதல் இன்னிங்சில் செஞ்சுரி அடித்து இந்தியாவை மீட்ட புஜாராவுக்கும், தொடர் நாயகன் விருது, சுழலால் மிரட்டிய அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது.