ஆன்டிகுவா : டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறியதால் இலங்கை ரசிகர்களிடம் நட்சத்திர வீரர் மேத்யூஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறி இருக்கின்றன. அதில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பரம எதிரியான வங்கதேசம் அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது.

இதன்பின் இலங்கை - நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் குரூப் சுற்றுடன் வெளியேறியது குறித்து இலங்கை சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசுகையில், டி20 உலகக்கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் கீழே இழுத்துவிட்டோம். அதற்காக ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்படி நடக்கும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
இதுவரை நாங்கள் ஏராளமான சவால்களை சந்தித்துள்ளோம். ஆனால் அதனை நினைத்து கவலையடைய தேவையில்லை. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாதது சற்றும் எதிர்பார்க்காதது. ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய சுற்றுப்பயணத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதேபோல் உலகக்கோப்பையை பொறுத்தவரை எந்த அணியையும் சாதாரணமாக நினைக்க கூடாது.
இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்ச்களுக்கும், டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால் இலங்கை அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எதிர்பாராதது. இன்னும் ஒரு போட்டியில் விளையாட வேண்டும். அதனை பெருமைக்காக விளையாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.