வீரர்களுக்கு ஊதிய உயர்வு கேட்ட அனில்கும்ப்ளே பதவிக்கு ஆபத்து.. புது பயிற்சியாளரை தேடுகிறது பிசிசிஐ
மும்பை: வீரர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்குமாறு கூறிய நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில்கும்ப்ளேவை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அப்பணியில் நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அனில்கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இந்த நிலையில், வரும் சாம்பியன்ஸ் லீக் தொடருடன் அவரின் பதவிக் காலம் முடிவடைகிறது.
இருப்பினும் கும்ப்ளே பதவிக் காலத்தை நீடிக்காத இந்திய கிரிக்கெட் வாரியம், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்க தொடங்கியுள்ளது.

கும்ப்ளேவும் பங்கேற்கலாம்
அதேநேரம், பயிற்சியாளர் கும்ப்ளேவும் மீண்டும் இதில் போட்டியிடலாம் என பிசிசிஐ கூறியுள்ளது. அவரின் விண்ணப்பம் நேரடியாக பெற்றுக்கொள்ளப்படும் என சலுகை காட்டியுள்ளது பிசிசிஐ.

நேர்முக தேர்வு
சச்சின், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி, நேர்முக தேர்வு நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் பிரசன்டேசன் செய்து காட்ட வேண்டியிருக்கும்.

ஊதிய உயர்வு
ஏ பிரிவில் உள்ள மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு 150 சதவீத ஊதிய உயர்வு கேட்டிருந்தார் கேப்டன் விராட் கோஹ்லி. இதற்கு கும்ப்ளே ஆதரவு தெரிவித்திருந்தார். இது பிசிசிஐயிலுள்ள அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

நிர்வாக கமிட்டி
புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது நியாயமான வகையிலும், சார்பற்ற தன்மையிலும் இருப்பதை உறுதி செய்ய, நிர்வாக கமிட்டியை சேர்ந்த ஒருவர் பார்வையாளராக நியமிக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications