இரண்டு மாதங்கள் விடுப்பு
தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொள்வதாக தகவல்கள் வெளியானது. அந்த இரண்டு மாதங்கள் முடிந்த பின்னரும் தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை.
ரசிகர்கள் காத்திருப்பு
அவர் ஓய்வு பற்றியும் எதுவும் அறிவிக்கவில்லை. தோனி ரசிகர்கள், அவரை மீண்டும் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என ஆவலாக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்திய அணி திட்டம்
இதற்கிடையே இந்திய அணி 2020 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறது. தோனி அந்த உலகக்கோப்பை தொடரில் ஆட விரும்புகிறார் என்ற பேச்சும் அவ்வப்போது அடிபட்டு வந்தது.
அனில் கும்ப்ளே கருத்து
இந்த நிலையில், தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது பற்றி அனில் கும்ப்ளே தன் கருத்தை கூறி இருக்கிறார். அடுத்து வரும் ஐபிஎல் தொடர் தான் அவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிறார் அவர்.
ஐபிஎல் தொடர்
அவர் கூறுகையில், "தோனி ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார் என்பதை வைத்து, இந்திய அணி உலகக்கோப்பையில் அவரது சேவை அணிக்கு தேவை என நம்பினால் அவர் அணியின் ஒரு அங்கமாக மாற வாய்ப்பு உள்ளது. அனால், நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.
ரிஷப் பண்ட் மீது கவனம்
தோனி விக்கெட் கீப்பர் என்ற நிலையில், தற்போது அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கும் ரிஷப் பண்ட்டின் பார்ம் அதிக கவனத்தை பெற்று வருகிறது.
அணிக்கு திரும்ப வாய்ப்பு
ரிஷப் பண்ட் சரியாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்யாத பட்சத்தில் தோனி மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அனில் கும்ப்ளே வேறு ஒரு வாய்ப்பும் உள்ளதை சுட்டிக் காட்டி உள்ளார்.
அடுத்த விக்கெட் கீப்பர்
அணியில் தற்போது சிறப்பாக ஆடி வரும் துவக்க வீரர் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் தான். எனினும், அவர் கீப்பிங் செய்யாமல், பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
ராகுலுக்கும் வாய்ப்பு
ரிஷப் பண்ட் சரியாக ஆடாத பட்சத்தில் ராகுல், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மாறவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் அனில் கும்ப்ளே. தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது அத்தனை எளிதாக இருக்காது என்றே தோன்றுகிறது.