மும்பை : இந்திய கிரிக்கெட்டில் திறமை வாய்ந்த வீரர்களாக இருந்தும் ஒரு முறை கூட உலக கோப்பையில் பங்கேற்க முடியாத வீரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
இதில் விவிஎஸ் லக்ஷ்மன், இசாந்த் சர்மா ஆகியோர் மிகப்பெரிய உதாரணம். இந்த பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக இணைந்தவர் தான் அம்பத்தி ராயுடு. இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளும், ஆறு டி20 போட்டிகளும் விளையாடிய ராய்டுவால் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம் பெற முடியவில்லை.

குறிப்பாக 2018 ஐ பி எல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ராயுடு ஒரு சதம் உள்ளிட்ட 602 ரன்களை குவித்தார். இந்த தருணத்தில் இந்திய அணியில் நடு வரிசையில் சரியான பேட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறினார்கள். அந்தக் கட்டத்தில் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை 21 ஒரு நாள் போட்டிகளில் ராயுடு விளையாடி இருந்தார்.
இதில் ஒரு சதம், நான்கு அரை சதம் உள்ளிட்ட 639 ரன்களை ராயுடு குவித்தார். இதன் காரணமாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் ராயுடுவின் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்வு குழுவினர் அவர் பெயரை அறிவிக்காமல் விஜய் சங்கரை சேர்த்து அதிர்ச்சி அளித்தனர்.

அதன் பிறகு கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நாயுடு தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ள அணில் கும்ப்ளே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ராயுடு கண்டிப்பாக விளையாடியிருந்திருக்க வேண்டும்.
அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது.
நிச்சயமாக இது மிகப்பெரிய தவறு. நான்காவது வீரராக அவரை தயார் செய்து வந்தார்கள். ஆனால் அணி அறிவிக்கும் போது அவருடைய பெயர் மட்டும் இல்லை. இது அனைவருக்குமே அப்போது ஆச்சரியமாக இருந்தது என்று ரவி சாஸ்திரி மற்றும் கோலியை மறைமுகமாக அணில் கும்ப்ளே சாடி இருந்தார்.