கோஹ்லிக்கும் ஓகே.. கும்ப்ளே 'கோச்' பதவிக்கு உடனே ஆபத்தில்லை!
லண்டன்: இந்திய அணி தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தொடர்ந்து செயல்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கும்ப்ளே பதவிக்காலம் இந்த மாதம் முடியவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு கும்ப்ளேவும் கூட விண்ணப்பித்திருந்தார்.
சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோரை கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்முக தேர்வு நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில், கும்ப்ளே பதவிக்காலத்தை நீடிக்கச்செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக வட்டார தகவல்கள் கூறுகின்றன. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிதான் இந்த ஆலோசனையை முன் மொழிந்துள்ளது.

அடுத்த தொடருக்கும் கோச்
சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றுவரும் இந்த சூழ்நிலையில், கும்ப்ளேவை பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என்று அக்குழு பரிந்துரைத்துள்ளதாம். எனவே இந்த போட்டித்தொடருக்கு பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள தொடர் வரை, கும்ப்ளேவே பயிற்சியாளர் பதவியில் தொடரச் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அட்ஜஸ்ட்
கேப்டன் விராட் கோஹ்லியும் இதற்கு ஓ.கே கூறிவிட்டாராம். அட்ஜஸ்ட் செய்வதில் தவறில்லை என கோஹ்லி பிசிசிஐ நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாதமே டூர்
இந்திய அணி இம்மாதம் 20ம் தேதி லண்டனிலிருந்து மே.இ.தீவுகளுக்கு செல்ல உள்ளது. ஜூலை 10ம் தேதி இந்திய அணி தாயகம் திரும்ப உள்ளது.

இன்டர்வியூ எப்போது?
அதேநேரம், ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு வந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் எப்போது நேர்முக தேர்வு நடைபெறும் என்ற விவரம் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications