டிராவிட் "ஸாரி" சொல்லியதால்தான்.. கும்ப்ளேவுக்குக் கிடைத்தது "அப்பாயின்ட்மென்ட்"!
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முதலில் ராகுல் டிராவிடைத்தான் கிரிக்கெட் வாரியம் அணுகியதாம். ஆனால் அவர் சீனியர் அணிக்கு தான் பயிற்சியாளராக விரும்பவில்லை, ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறேன் என்று கூறியதைத் தொடர்ந்துதான் கும்ப்ளேவை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தேர்ந்தெடுத்ததாம்.
இந்தத் தகவலை பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அப்படி இவர்களே கும்ப்ளேவைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தால், பிறகு ஏன் விண்ணப்பங்களைப் பெற்று இன்டர்வியூ எல்லாம் நடத்தினார்கள் என்பது புரியவில்லை.
உண்மையில் இன்டர்வியூ என்பது சும்மானாச்சுக்கும் நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. டிராவிட் சரிப்பட்டு வராத காரணத்தால் கும்ப்ளேவை தேர்வு செய்து விட்டுத்தான் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற அறிவிப்பையே பிசிசிஐ வெளியிட்டது போல தெரிகிறது.

நடந்தது என்ன?
தலைமைப் பயிற்சியாளர் தேர்வு தொடர்பாக அனுராக் தாக்கூர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், பிசிசிஐயின் முதல் சாய்ஸ் ராகுல் டிராவிட்தான். அவரிடம் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றுமாறு நான் கேட்டேன்.

ஜூனியர் அணிக்கு வர விருப்பம்
அதை டிராவிட் நிராகரிக்கவில்லை. ஆனால் ஜூனியர் அணிக்குப் பயிற்சியாளராக இருப்பதாக கூறினார். அதுதான் டிராவிட். அவர் சீனியர் அணி பயிற்சியாளர், பணம் ஆகியவற்றைப் பார்க்கவில்லை. இளம் வீரர்களுக்குப் பயிற்சியாளராக இருக்கவே விரும்பினார் என்றார் தாக்கூர்.

யு 19 பயிற்சியாளர்
டிராவிட், இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சியாளராக இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்கதேசத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிப் போட்டி வரை வந்து, தோல்வியுற்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜூனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார்.

டெல்லி அணியின் மென்டார்
43 வயதான டிராவிட், இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மென்டாராகப் பணியாற்றினார். அதற்கு முன்பு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்திருந்தார்.


Click it and Unblock the Notifications