மும்பை : கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியான அனிமல் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. பெண்களை மிகவும் கீழ்த்தனமாக இந்த படம் காட்டுவதாக புகார் அளித்துள்ளது.
இந்த படம் ஆண் ஆதிக்க சமூகத்தை கொண்டாடும் விதமாக எடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கியிருக்கிறார். இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா, அனில் கபூர் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த படம் பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனாட்கட் , தமது வாழ்க்கையில் மூன்று மணி நேரத்தை வீணடித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்
இது குறித்து பேசிய அவர் அனிமல் திரைப்படம் நான் பார்த்ததிலே ஒரு மோசமான திரைப்படம். பெண்களை இழிவு படுத்துவது, ஆணாதிக்கத்தை கொண்டாடுவது ஆகியவற்றை பெருமை பேசும் வகையில் இந்த படம் இருக்கிறது.
பெண்களை இழிவுபடுத்துவதை தான் ஆண்மையின் இலக்கணம் என்பது போல் படத்தை எடுத்திருக்கிறார்கள். வீரமான ஆண் என்றால் இவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போல் படத்தை எடுத்திருப்பது மிகவும் கேவலமான விஷயம். நாம் ஒன்றும் காடுகளிலோ அரண்மனைகளிலோ ஒன்றும் வாழவில்லை. நாம் எந்த போரிலும் பங்கு பெறுவதில்லை.
எதையும் வேட்டையாடி சாப்பிடுவதில்லை. இந்த படத்தில் நடிகர்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை. லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு சினிமாவை இப்படி ஒரு கேவலமான விஷயத்தை உயர்த்திப் பேசுவது சரி கிடையாது. சமூகப் பொறுப்பு என்பது அனைவருக்கும் இருக்கிறது. அதனை திரைத்துறையில் உள்ள கலைஞர்களும் மறந்துவிடக்கூடாது.
ஒரு மோசமான படத்தை பார்ப்பதற்காக என் வாழ்க்கையில் மூன்று மணி நேரத்தை வீணடித்து விட்டேன் என்பதை நினைக்கும் போது எனக்கே வேதனையாக இருக்கிறது என்று தெய்தேவ் உனாட்கட் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இதற்கு ரன்பீர் கபூர் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து தன்னுடைய பதிவை அவர் நீக்கிவிட்டார்.