"வைபவ் சூர்யவன்ஷி பற்றி ஏன் பேசிக்கிட்டே இருக்கீங்க? சச்சின் கூட.." ஆதங்கத்தை கொட்டிய அஞ்சும் சோப்ரா
மும்பை: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி தொடர்ந்து ஊடகங்களில் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா கூறி இருக்கிறார். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்து இருந்தார் வைபவ் சூர்யவன்ஷி.
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச டி20 போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். முன்னதாக அவர் இங்கிலாந்து டி20 தொடரில் சர்வதேச அறிமுகம் பெற்ற போதும் சரியாக ரன் குவிக்கவில்லை. அப்போது அவரது அறிமுகம், ரன் குவிக்காமல் ஏமாற்றம் அளித்தது என அனைத்தும் பேசுபொருள் ஆனது.

மைகேல் (Mykhel) தளத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அஞ்சும் சோப்ரா, வைபவ் சூர்யவன்ஷி குறித்துத் தேவையில்லாமல் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அஞ்சும் சோப்ரா, "வைபவ் சூர்யவன்ஷி அணிக்குத் தேர்வானாலும் விவாதிக்கிறார்கள், தேர்வாகவில்லை என்றாலும் விவாதிக்கிறார்கள். ரன் அடித்தாலும் பேச்சு, ரன் அடிக்காவிட்டாலும் பேச்சு. ஒரே ஒரு வீரரைப் பற்றி ஏன் இவ்வளவு பேச்சு என்று எனக்குப் புரியவில்லை. இப்போது நாம் ஒன்று வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றிப் பேசுகிறோம், அல்லது ரோஹித் சர்மாவைப் பற்றிப் பேசுகிறோம். நேரம் இருந்தால் விராட் கோலியைப் பற்றிப் பேசுகிறோம். இது முற்றிலும் தேவையில்லாத ஒன்று" என்று சாடினார்.
மேலும் பேசிய அவர், "இந்திய அணிக்கு எத்தனையோ வீரர்கள் வந்து சென்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் கூட மிகவும் சிறிய வயதில் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். வைபவிடம் அசாத்திய திறமை இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சதம் அடித்தாலும் அல்லது பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தாலும் அவர் இந்திய அணியின் ஒரு வீரர் மட்டுமே. அவரை ஒரு சாதாரண இந்திய வீரராக விளையாட விடுங்கள். எப்போதும் ஒரே வீரரைப் பற்றிப் பேசுவதை நான் விரும்புவதில்லை" என்று கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

