திருநெல்வேலி: நடப்பு சாம்பியனான சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி, தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது. நேற்று நடந்த ஆட்டத்தில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி 26 ரன்களில் சேப்பாக் அணியை வென்றது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் நடக்கிறது. நடப்பு சாம்பியனான சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதியது. அதில் 31 ரன்களில் திருச்சி வென்றது.

இந்த நிலையில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணியுடன் நேற்று விளையாடியது சேப்பாக் அணி. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஜே. கவுசிக், ஷீஜித் சந்திரன் தலா 37 ரன்கள் எடுத்தனர். நிலேஷ் சுப்பிரமணியன் 31 ரன்கள் எடுத்தார்.
சேப்பாக் அணியின் முருகன் அஸ்வின், சன்னி குமார் சிங் தலா 3 விக்கெட்களையும், சித்தார்த் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் அடிய சேப்பாக் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. எஸ். கார்த்திக் அதிகபட்சமாக 28 ரன்களும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 24, முருகன் அஸ்வின் 22 ரன்கள் எடுத்தனர்.
மதுரை அணியின் ராகுல் ஷா, வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்கள், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
சேப்பாக்கம் அணி தொடர்ந்து 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த மதுரை, இந்த ஆட்டத்தில் 26 ரன்களில் வென்றது.