சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை புனேயில் நடக்கும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. இந்தப் போட்டியை பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து இரண்டாவது முறையாக விசில்போடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று புறப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிஎஸ்கே திரும்பியுள்ளதால், சென்னையில் மீண்டும் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தனர். இதனிடையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன.

அதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்த 6 போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. அதன்படி, சிஎஸ்கே அணி புனேயில் தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் ஏப்ரல் 20ல் மோதியது. இந்தப் போட்டியை பார்ப்பதற்காக, ஆயிரம் ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் புனேவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த ரயிலுக்கு விசில்போடு எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. வரும் 13ம் தேதி புனேயில் நடக்கும் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் சிஎஸ்கே விளையாடுகிறது.
புள்ளிப் பட்டியலில் டாப்பில் இருக்கும் இரண்டு அணிகளும் மோதும் அந்த ஆட்டத்துக்காக சென்னையில் இருந்து இரண்டாவது முறையாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களை, புனேவுக்கு விசில் போடு எக்ஸ்பிரஸ் மூலம் சிஎஸ்கே நிர்வாகம் மீண்டும் அழைத்து செல்கிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து இன்று புறப்பட்டுள்ளது.