மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அண்மை காலமாக ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதால், ஏராளமான கோயில்களுக்கு சென்று வருவதாக இஷாந்த் சர்மா ரகசியம் பகிர்ந்துள்ளார்.
இஷாந்த் சர்மா - விராட் கோலி இடையிலான நட்பு சிறு வயதிலேயே தொடங்கியது. இருவரும் டெல்லி அணிக்காக ஒரே காலத்தில் விளையாடியவர்கள். அதேபோல் இந்திய அணிக்கு விராட் கோலி தலைமையேற்கும் போது வெளிநாடுகளில் வெற்றிபெற விராட் கோலி நம்பியது இஷாந்த் சர்மாவை தான். இருவரும் களத்தில் ஜாலியாக இருப்பதோடு, களத்திற்கு வெளியேவும் நட்புடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் யூ ட்யூப் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இஷாந்த் சர்மா, விராட் கோலி பற்றி ஏராளமான ரகசியங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஃபிட்னஸ் கலாசாரத்தை இந்திய அணிக்குள் கொண்டு வந்ததே விராட் கோலி தான். கேப்டனாக பதவியேற்ற பின் விராட் கோலி அனைவருக்குள்ளும் ஃபிட்னஸ் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார். குறிப்பாக விராட் கோலி தலைமையின் கீழ் பவுலர்கள் சிறப்பாக முன்னேறினார்கள் என்று தெரிவித்தார்.
அதேபோல், விராட் கோலி வாழ்க்கையின் அனைத்து சூழல்களிலும் நான் நெருங்கி இருந்து பார்த்திருக்கிறேன். அவரின் வாழ்க்கையில் அனுஷ்கா சர்மா தான் அமைதியை கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது பலரும் ஆன்மிகம் பற்றி பேசி வருகிறோம். அதேபோல் விராட் கோலியும் கோயில்களுக்கு செல்ல தொடங்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் தோனி பற்றி இஷாந்த் சர்மா பேசுகையில், தோனி எப்போதும் என்னை அவரது சகோதரர் போல் பார்த்துக் கொள்வார். எனக்கு அதிகபடியான சுதந்திரத்தை அளிப்பார். எப்போதும் அவரின் அறைக் கதவு திறந்தே இருக்கும். எப்போது சென்றாலும், வீரர்கள் சூழ்ந்திருப்பார்கள். நல்ல மனநிலையில் இருந்தால், ஏராளமான அறிவுரைகளை நமக்கு அளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.