வீட்டில் முடங்கிய விராட் கோலி
சர்வதேச அளவில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை முடித்து வைத்துள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். கிரிக்கெட் வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதற்கு கேப்டன் விராட் கோலியும் விதிவிலக்கல்ல..
ஓய்வு கேப்பியா? வறுத்தெடுத்த கொரோனா
அடுத்தடுத்த தொடர்களில் ஓய்வின்றி விளையாடிவரும் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையில் ஓய்வு அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் விராட் கோலி. ஓய்வின்றி விளையாடுவதால், மனநலம் மற்றும் உடல்நலம் பாதிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓய்வே வேணாம்டா சாமி என்று கூறும்படியாக வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியான சூழலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா.
மனைவியுடனான தொடர் பதிவுகள்
ஆயினும் கிரிக்கெட் விளையாட முடியவில்லை என்ற வருத்தத்தை தவிர விராட் கோலிக்கு பொழுதை கழிப்பதில் வேறு எந்த சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. காதல் மனைவியுடன் இணைந்து அவர் செய்யும் பல விஷயங்களையும், கொண்டாட்டங்களையும் தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவரும் அனுஷ்கா சர்மாவும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் ரசிகர்களுக்கும் அந்த கொண்டாட்டங்கள் கடத்தப்படுகின்றன.
முடியாதென்று மறுக்கும் கோலி
இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய பதிவில் விராட் கோலியை அவர் வம்பிழுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். விராட் கோலியை பவுண்டரி அடிக்கும்படி அனுஷ்கா வம்பிழுக்க, அதற்கு கோலி தலையசைத்து மறுப்பு தெரிவிக்கும்படியாக அந்த வீடியோ போகிறது. ஆயினும், அவர் வெளியிட்டுள்ள கேப்ஷனில் அவர்களுக்கிடையிலான புரிதல் வெளிப்படுகிறது.
ரசிகையாக அனுஷ்காவின் செயல்
கிரிக்கெட் விளையாடும் தருணங்களையும், மைதானத்தையும், லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்பையும் விராட் கோலி கடந்த சில வாரங்களாக மிஸ் செய்வதாகவும், அதனால் அந்த அனுபவத்தை கொடுக்கும்வகையில், ரசிகையாக மாறி பவுண்டரியை அடிக்கும்படி தான் கூறியதாகவும் அனுஷ்கா தனது கேப்ஷனில் கூறியுள்ளார்.