துபாய்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மகன் ஆஹானை நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா கொஞ்சி விளையாடும் வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விராட் கோலியின் 300வது ஒருநாள் போட்டியை நேரில் பார்க்க வந்த அனுஷ்கா சர்மா, அப்படியே ரோஹித் சர்மாவின் மகன் ஆஹான் மற்றும் மனைவி ரித்திகாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை மட்டுமே குவித்திருக்கிறது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும் சேர்த்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்ரி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் விளையாடியதன் மூலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 7வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் காரணமாக மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் சகோதரர் விகாஸ் கோலி ஆகியோரையும் விராட் கோலி துபாய்-க்கு அழைத்திருந்தார்.
நேற்றிரவே துபாய் வந்த இருவரும் இன்று மைதானத்தில் இருந்தனர். இதனால் விராட் கோலியின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி ஃபார்முக்கு வந்திருந்தார். இன்றைய இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கிய விராட் கோலி, 11 ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடிக்க பேட்டை விளாசினார்.
ஆனால் கிளென் பிலிப்ஸின் அபார கேட்ச் காரணமாக விராட் கோலி 11 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார். அப்போது அரங்கில் இருந்த அனுஷ்கா சர்மா சோகத்தை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அனுஷ்கா சர்மாவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. துபாய் மைதானத்தில் இருந்த ரோஹித் சர்மா மனைவி ரித்திகா மற்றும் மகன் ஆஹான் ஆகியோரை அனுஷ்கா சர்மா சந்தித்துள்ளார்.
அனுஷ்கா சர்மா மைதானத்தில் சிறப்பு இருக்கை பகுதியில் ஆஹானை கொஞ்சும் வீடியோ வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அண்மை காலமாக விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க அனுஷ்கா சர்மா வருவதை தவிர்த்து வருகிறார்.
லண்டனில் குடியேறி இருப்பதால் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் துபாய் வந்த போது ரோஹித் சர்மாவின் மகனை அனுஷ்கா சர்மா சந்தித்து கொஞ்சி உள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.