ஏராளமான ரசிகர்கள்
இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் ஆதர்ச தம்பதிகளாக விளங்கி வருகின்றனர் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி. இவர்களின் சமூக வலைதள பதிவுகளுக்கு லைக் போடுவதற்கென்றே லட்சக்கணக்கில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு ஏராளமானவர்களின் விருப்பத்திற்குரிய ஜோடியாக இவர்கள் உள்ளனர்.
கர்ப்பம் குறித்த அறிவிப்பு
கடந்த 2017 நவம்பர் மாதத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த மாதத்தில் இவர்கள் தங்களது முதல் குழந்தை குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டனர். வரும் ஜனவரி மாதத்தில் இருவராக உள்ள தாங்கள் மூவராக மாறிவிடுவோம் என்று ஒரே நேரத்தில் இருவரும் மகிழ்ச்சிப் பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்டனர்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
ஐபிஎல் போட்டிகளுக்காக துபாய் சென்றுள்ள விராட்டிற்கு அங்குதான் இந்த செய்தி கிடைத்தது. இருவரும் துபாயில் தங்களது கொண்டாட்டத்தை கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில், தன்னுடைய கர்ப்பம் வெளியில் தெரிவதை தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அனுஷ்கா சர்மா. உங்களுக்குள் ஒரு உயிர் உருவாவது எதைவிடவும் சிறப்பானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி உருக்கம்
இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு துபாயிலிருந்து கமெண்ட் செய்துள்ள கேப்டன் விராட் கோலி, தன்னுடைய முழு உலகமும் ஒரே பிரேமில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அழகான பின்புலத்தில் அனுஷ்கா சர்மா எடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. பகிரப்பட்ட சில மணிநேரங்களில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது.