விஜயாவாடா: ஆந்திராவில் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பாக அடிபட்ட ரஞ்சி கிரிக்கெட் வீராங்கனை துர்கா பவானி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னாள் ரஞ்சி வீராங்கனை மட்டினேனி துர்கா பவானி. 30 வயதான இவர் சமீபத்தில் செய்திகளில் பரபரப்பாக அடிபட்டார்.
ஆல் ரவுண்டரான இவர், தன்னை ஒரு முன்னாள் ஆசிய கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக புகார் கூறியிருந்தார் பவானி. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இதுதொடர்பாக அவர் புகாரும் கொடுத்தார். ஆனால் திடீரென கோர்ட்டில் ஆஜராகி தான் கொடுத்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார் பவானி. திருப்பதியைச் சேர்ந்த ஒரு அதிகாரி தன்னைக் கட்டாயப்படுத்தி இப்படி ஒரு புகாரைக் கொடுக்க வைத்ததாக கூறி மேலும் பரபரப்பைக் கிளப்பினார் பவானி.
இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் பவானி.
இதுகுறித்து மச்சாவரம் போலீஸார் கூறுகையில், தனது வீட்டு மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளார் பவானி. பவானியின் உறவினரான துர்காம்பா தனது சகோதரியைப் பார்க்க வீட்டுக்கு வந்தபோதுதான் அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது என்று கூறினர்.