கொல்கத்தா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சாளர் ஆகிப் நபியின் பெயர் கூட உச்சரிக்கப்படவில்லை. அவர் அந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது நிலைமையே வேறு. ஜம்மு காஷ்மீர் அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இப்போது ஆகிப் நபி ஒரு நட்சத்திர வீரராக மாறி விட்டார். மேலும், 2026 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் 8.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார். நாடு முழுவதும் அறியப்பட்ட ஒரு வீரராக அவர் இப்போது மைகேல் (MyKhel) தளத்துக்கு மனம் திறந்து பேட்டி அளித்தார்.

இந்த ரஞ்சி சீசனில் ஆகிப் நபி ஒரு புயலாகவே உருவெடுத்துள்ளார். பந்துவீச்சில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் ரன்களைக் குவித்துள்ளார். வங்காள அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளையும், காலிறுதியில் மத்திய பிரதேசத்திற்கு எதிராக 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
"நாங்கள் முதல் தர கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்திலிருந்தே இது ஒரு கனவு. ஜம்மு காஷ்மீர் அணியை ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினோம். இதற்காக பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். ஜேகேசிஏ (ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பு) பல முகாம்களை அமைத்து எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது. இதுவரை ஒரு அற்புதமான பயணமாக இது இருந்துள்ளது" என்று அவர் கூறினார்.
அணியின் பங்களிப்பு குறித்துப் பேசிய அவர், "இது ஒரு கூட்டு முயற்சி. ஒவ்வொரு போட்டியிலும் எங்களுக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்தார். எங்கள் அனைவரின் கனவுப் பங்களிப்பும் இதில் உள்ளது" என்றார்.
ஆகிப் நபியின் பந்துவீச்சில் மணிக்கட்டு நிலை மிகவும் வலுவாக இருப்பதாக ஜம்மு காஷ்மீர் பந்துவீச்சு பயிற்சியாளர் பி. கிருஷ்ணகுமார் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதையே ஆகிப் நபியும் உறுதிப்படுத்தினார். "நான் விஷயங்களை எளிமையாக வைத்திருக்கிறேன். சரியான இடங்களில் பந்துவீசுவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். பயிற்சியாளர் கிருஷ்ணா சாருடன் இணைந்து எனது மணிக்கட்டு நிலையைச் சரியாக வைப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். வெளிநாடுகளில் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடிய அனுபவம் எனக்குக் கை கொடுத்தது. அதன் முடிவுகள் இப்போது தெரிகின்றன" என்றார்.
பந்துவீச்சு இவரது பலமாக இருந்தாலும், சமீபகாலமாக பேட்டிங்கிலும் ஆகிப் நபி ஜொலித்து வருகிறார். ரஞ்சி கோப்பையில் அரைசதங்கள் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் ஒரு சதம் அடித்து அசத்தினார். "நான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கவனம் செலுத்துகிறேன். ஆனால் சமீபகாலமாக பேட்டிங்கிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பேட்டிங் பிடிக்கும், ஆனால் பந்துவீச்சிற்கு முன்னுரிமை கொடுத்ததால் அதில் கவனம் செலுத்தவில்லை. இப்போது பேட்டிங் பயிற்சியும் செய்வது அணிக்குக் கூடுதல் பலத்தைத் தரும் என்பதை உணர்ந்துள்ளேன். அணியின் வெற்றிக்காக எதையும் மேம்படுத்த நான் தயாராக இருக்கிறேன்" என்றார்.
கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி இறுதிப்போட்டியில் விளையாடத் தயாராகி வரும் ஆகிப், தனது பாரமுல்லா நாட்களை நினைவுகூர்ந்தார். முதலில் படிப்பு தான் முக்கியம் என்று பெற்றோர் விரும்பிய நிலையில், தனது விடாமுயற்சியால் இன்று இந்த இடத்திற்கு அவர் வந்துள்ளார்.
"ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்த வெற்றி மிக முக்கியமானது. ஆரம்பத்தில் இதைப் ஒரு தொழிலாகப் பார்ப்பது கடினமாக இருந்தது, சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால் நாங்கள் இறுதிப்போட்டிக்குச் சென்றிருப்பது பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும். எங்கள் பகுதியிலிருந்து இன்னும் பல வீரர்கள் உருவாவார்கள் என்று நான் நம்புகிறேன்."
ஆகிப் நபியின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல பின்னடைவுகளைச் சந்தித்திருந்தாலும், வீழ்ந்த போதெல்லாம் எழும் வலிமை அவரிடம் இருந்தது. துலீப் கோப்பையில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகுதான் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
"நான் கடினமாக உழைக்கும் மக்கள் வாழும் இடத்திலிருந்து வருகிறேன். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். துலீப் கோப்பை சாதனைக்குப் பிறகுதான் மக்கள் என்னைப் பற்றிப் பேசத் தொடங்கினர். எனது மனநிலை எப்போதும் ஒன்றுதான், 'நடந்தால் மகிழ்ச்சி, நடக்காவிட்டால் மீண்டும் கடுமையாக உழைப்பேன்'. ஏதேனும் ஒன்று கைக்கூடாவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் குடும்பத்திலிருந்து நான் வந்தவன்."
2026 ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 8.40 கோடிக்கு வாங்கியது. ஆனால் அந்தத் தொகையைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. "எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நான் இந்த இடத்திற்குத் தகுதியானவன் என்று நம்புகிறேன். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன். மிட்செல் ஸ்டார்க் போன்ற ஜாம்பவான்கள் மற்றும் கே.எல்.ராகுல், அக்சர் படேல், குல்தீப் யாதவ் போன்ற இந்திய நட்சத்திரங்களுடன் டிரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொள்வது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்," என்றார்.
அடுத்த இலக்கு என்ன என்ற கேள்விக்கு, 'இந்திய அணி' என்று உறுதியாகப் பதிலளித்தார். "இந்திய அணியின் வெள்ளை நிற டெஸ்ட் சீருடையை அணிய வேண்டும் என்பதே எனது இறுதி லட்சியம். அதற்காக நான் எதையும் செய்வேன். இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: ஒரு இலக்கை மனதிற்குள் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக முழு மூச்சுடன் உழையுங்கள். உங்கள் உழைப்பிற்கு உண்மையாக இருங்கள். இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதே எனது ஒரே நோக்கம்."
கடந்த 14 மாதங்களில் ஆகிப் நபியின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. அங்கீகாரத்திற்காக ஏங்கிய ஒரு வீரர், இன்று நாட்டின் மிகவும் பேசப்படும் வீரராக மாறியுள்ளார். ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் கற்கும் ஆர்வம் - இதுவே ஆகிப் நபியின் வெற்றிக்கான தாரக மந்திரம்!