கொல்கத்தா: கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் இந்தியா வந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் எமிலியானோ மார்ட்டினஸ். பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்ட நிலையில், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. அதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது. பிரான்ஸ் வீரர்கள் அடித்த இரு பெனால்டி ஷூட்டை தடுத்து நிறுத்தி உலகக்கோப்பை நாயகனாக உருவெடுத்தார் எமிலியானோ மார்ட்டினஸ்.

கோல் கீப்பிங்கின் போது டான்ஸ் ஆடிக் கொண்டு எதிரணி வீரர்களின் கவனத்தை திசை திருப்புவதோடு பதற்றத்தையும் விளைவிக்கும் இவரது ஸ்டைல் காரணாம இந்தியாவில் பலரும் எமிலியானோ மார்ட்டினஸ்-க்கு ரசிகராக மாறினார்கள். தமிழ்நாட்டில் சில ரசிகர்கள் டான்ஸிங் ரோஸ் என்று செல்லப் பெயர் வைத்து சமூக வலைதளங்களில் கொண்டாடினர். அந்த அளவிற்கு எமிலியானோ மார்ட்டினஸ் இந்தியாவில் பிரபலமான வீரராக அறியப்பட்டார்.
இந்த நிலையில் நட்சத்திர வீரர் எமிலியானோ மார்ட்டினஸ் இந்தியா வந்துள்ளார். மரடோனா, பீலே உள்ளிட்ட வீரர்கள் வந்த மேற்கு வங்க மாநிலத்திற்கே எமிலியானோ மார்ட்டினஸ் அழைத்து வரப்பட்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மார்ட்டினஸ் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார். நாளை குழந்தைகளுடனான உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அதன்பின் மோகன் பகாம் கிளப் தரப்பில் பீலே, மரடோனா மற்றும் கார்பீல்ட் சோபர்ஸ் ஆகியோரின் பெயர்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வாயில்களை திறந்து வைக்கவுள்ளார்.
இந்தியா வந்தது குறித்து எமிலியானோ மார்ட்டினஸ் பேசுகையில், இந்தியா வந்திருப்பது சிறந்த உணர்வை கொடுக்கிறது. இந்தியா வருவது என் கனவாக இருந்தது. தற்போது வந்ததன் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. இந்தியா வருவதாக வாக்கு கொடுத்திருந்தேன். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்தியா வந்த அவருக்கு மோகன் பகான் கிளப் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.