டெல்லி:கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், தனது அறிமுக ஆட்டத்தில் டக் அவுட்டானார். இதன் மூலம் சச்சின் பெயரை அவர் காப்பாற்றியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடி, சாதனைகள் படைப்பதில் சாதனை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய மகன் அர்ஜூனும் கிரிக்கெட் விளையாடுகிறார்..
தற்போது இலங்கையில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது இளைஞர் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூன்.
18 வயதாகும் அர்ஜூன், முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார். காமில் மிஷாராவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் அர்ஜூன்.
பேட்டிங்கில் தந்தைப் போலவே சிறப்பாக விளையாடக் கூடியவர் அர்ஜூன். உள்ளூர் போட்டிகளில் அதிரடி காட்டியுள்ளார். இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 11 பந்துகளை சந்தித்த அவர் டக் அவுட்டானார்.
சச்சின் டெண்டுல்கர், 1989ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு தினப் போட்டியில் அறிமுகமானார். அதில் அவர் டக் அவுட்டானார். தந்தை வழியில் மகனும் முதல் ஆட்டத்தில் டக் அவுட்டாகியுள்ளார்.