மும்பை: அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் முடித்த ஒரே நாளில் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சானியா சந்தோக்கை மணந்த ஒரே ஒரு நாள் இடைவெளியில், மும்பையில் நடந்த டிஒய் பாட்டீல் டி20 கோப்பை அரையிறுதிப் போட்டியில், அவர் டிஒய் பாட்டீல் ப்ளூ அணிக்காக விளையாடினார். சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன், வியாழக்கிழமையன்று சானியாவுடன் திருமணம் செய்துகொண்டார். இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்த மறுநாளே விளையாட வந்த அர்ஜுனுக்கு இந்தப் போட்டி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மும்பை கஸ்டம்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், அவர் பந்துவீச்சில் ஒரு ஓவரில் 20 ரன்களை விட்டுக்கொடுத்தார். பேட்டிங்கில் 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், டிஒய் பாட்டீல் ப்ளூ அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வரும் ஐபிஎல் 2026 தொடருக்காக தற்போது அர்ஜுன் தயாராகி வருகிறார். ஐந்து முறை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்குஅர்ஜூன் மாறியுள்ளார். இதற்கிடையில், சச்சின் டெண்டுல்கர் தனது மகன் மற்றும் மருமகளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் நன்றி தெரிவித்தார்.

“அர்ஜுன் மற்றும் சானியா இருவரும் இணைந்து இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதால், அனைவரிடமிருந்தும் பொழியும் அன்பிற்கும் ஆசீர்வாதங்களுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக உணர்கிறோம். உங்கள் வருகையும், வாழ்த்துச் செய்திகளும், மனமார்ந்த ஆசீர்வாதமும், இந்த திருமணத்தை எங்கள் குடும்பத்திற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஜோடிக்கும் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றியுள்ளது. மிக்க நன்றி,” என்று டெண்டுல்கர் 'எக்ஸ்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
சானியா சந்தோக், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தி ஆவார். அவர் 2020ஆம் ஆண்டில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர். LSE நிறுவனத்தில் வர்த்தக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். மேலும், அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட கால்நடை தொழில்நுட்ப வல்லுநரும் ஆவார்.

அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண விழாவில், மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான் உட்பட பல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.