லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் பவுலிங் செய்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட்கள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது.

இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்க உள்ளது. முதல் போட்டியில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்பியதால், இந்திய அணி தோல்வி அடைந்தது.
அதையடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தப் பயிற்சியின்போது, கேப்டன் விராட் கோஹ்லி உள்ளிட்டோருக்கு, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் பவுலிங் செய்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சமீபத்தில் அறிமுகமானார் அர்ஜூன். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், ஒருதினப் போட்டித் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கருடன் இங்கிலாந்து சென்றுள்ள அர்ஜூன், இந்திய அணிக்கு பவுலிங் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்னும், 2017ல் நியூசிலாந்துக்கு எதிராக போட்டியின்போது இந்திய அணிக்கு அர்ஜூன் பந்துவீசியுள்ளார். அதேபோல் மகளிர் உலககக் கோப்பை போட்டிக்கு முன் இந்திய மகளிர் அணிக்கும் அவர் பந்து வீசியுள்ளார்.