கொல்கத்தா: சையத் முஷ்டாக் அலி டிராபி 2025 தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு டி20 உலககோப்பை நடைபெறுவதால், இந்தப் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இந்த தொடரின் முதல் நாளில் யாரும் எதிர்பாராத திருப்பத்துடன் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாக மைதானத்தில் தொடங்கியது.
உத்தரபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், கோவா அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்கி தொடக்க வீரராக விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், சையத் முஷ்டாக் அலி டிராபி 2025-ன் முதல் போட்டியில் புதிய அவதாரத்தில் தோன்றினார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், தனது துணிச்சலான ஆட்டம், நேர்த்தியான ஷாட்கள் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

கோவா அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய அர்ஜுன், 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டம் குறைவான பந்துகளில் அதிரடியை காட்டும் விதமாக இருந்தது, இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும். இஷான் கடேக்கரும் சிறப்பாகத் தொடங்கினாலும், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு விக்கெட் இழந்த நிலையில், அர்ஜுன் ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க, முயற்சி செய்தார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்து, பவர்பிளேயில் கோவா அணிக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்தனர்.உத்தரபிரதேச வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி வீசிய 8வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது கோவா அணி 7.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. அர்ஜுனின் ஸ்டிரைக் ரேட் 127-க்கு மேல் இருந்தது.
பின்னர், விகாஷ் கன்வர் சிங் 21* ரன்களும், ராஜசேகர் ஹரிகாந்த் 12 ரன்களும் எடுக்க, கோவா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. உத்தரபிரதேச அணிக்கு சிவம் மாவி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சுனில் குமார், விப்ராஜ் நிகம், பிரசாந்த் வீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை 24 டி20 போட்டிகளில் விளையாடி, 25.07 சராசரியில் 27 விக்கெட்டுகளையும், 8.75 எகானமி விகிதத்திலும் எடுத்துள்ளார். மேலும், 119 ரன்கள் குவித்துள்ளார், அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்திருக்கிறார். 22 முதல் தரப் போட்டிகளில், அர்ஜூன் டெண்டுல்கர் 48 விக்கெட்டுகளையும், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 620 ரன்களையும் எடுத்துள்ளார்.
26 வயதான அர்ஜுன், இதுவரை 18 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 24 விக்கெட்டுகளையும், 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில், அர்ஜுன் ஒருமுறை மட்டுமே பேட் செய்து, 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்துள்ளார்.இந்த மாத தொடக்கத்தில், டெண்டுல்கரின் ஐபிஎல் பயணம் புதிய திருப்பத்தை எட்டியது. மும்பை இந்தியன்ஸ் அணியில் சில சீசன்கள் இருந்த பிறகு, தற்போது, 30 லட்சம் ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். எப்போதும் கீழ்வரிசையில் விளையாடும் அர்ஜூன், தனது தந்தை போல் தொடக்க வீரராக அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.