"அட்டாக்கிங்" சதம் போட்ட சச்சின் மகன் அர்ஜூன்
மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், தனது தந்தையின் பெயர் வைக்கப்பட்ட ஜிம்கானா மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சதம் போட்டு அசத்தினார்.
மும்பையில் உள்ள ஜிம்கானா மைதானத்திற்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் தற்போது மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான பய்யாடே டிராபி போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் சுனில் கவாஸ்கர் லெவன் அணி சார்பில் அர்ஜூன் ஆடி வருகிறார். இந்த அணிக்கும் ரோஹித் சர்மா லெவன் அணிக்கும் இடையிலான போட்டி ஜிம்கானா மைதானத்தில் நடந்தது. அதில்தான் சதம் போட்டார் சச்சின் மகன்.

மொத்தம் 4 டீம் பாஸ்
இந்தத் தொடரில் சுனிஸ் கவாஸ்கர் லெவன், ரோஹித் சர்மா லெவன், சச்சின் டெண்டுல்கர் லெவன், திலிப் வெங்சர்க்கர் லெவன் என நான்கு அணிகள் மோதுகின்றன.

தேர்வுக்காக
மும்பை 16 வயதுக்குட்பட்டோருக்கான அணித் தேர்வுக்காக இந்தத் தொடர் நடத்தப்படுகிறது. எனவ அணியில் இடம் பிடிக்கும் முனைப்புடன் வீரர்கள் தங்களது திறமைகளை மைதானத்தில் கொட்டி வருகின்றனர்.

அர்ஜூன் சதம்
கவாஸ்கர் லெவன் அணியில் இடம் பெற்றுள்ள அர்ஜூன் டெண்டுல்கர், ரோஹித் சர்மா லெவன் அணியுடனான போட்டியில் சிறப்பாக ஆடி சதம் போட்டார். அவர் 156 பந்துகளைச் சந்தித்து 106 ரன்களைக் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கமாகும்.

பிரஷரே இல்லாமல்
அணி பயிற்சியாளர் விகாஸ் சதம் கூறுகையில் அர்ஜூன் டெண்டுல்கர் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார். எந்த நெருக்கடியும் இல்லாமல் விளையாடினார். ஸ்டிரோக்குகளை அழகாக ஆடினார் என்றார்.

முன்னாடி மாதிரி இல்லை
முன்பு அர்ஜூன் டெண்டுல்கர் அந்த அளவுக்கு ஆடாமல் இருந்து வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த வருடம் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அவர் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி அணியில் இடம் பெற்று 42 பந்துகளில் 118 ரன்களைக் குவித்து அதிரடியாக ஆடினார் என்பது நினைவிருக்கலாம்.

இங்கிலாந்து வீரர்களுடன் பயிற்சி
இந்தாண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களுக்குப் பந்து வீசி பயிற்சி பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications