மும்பை: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர், தனது கேப்டன் ரிஷப் பந்த்தை நெட் பயிற்சியில் யார்க்கர்களால் கவர்ந்தார். 26 வயதான அர்ஜூன் டெண்டுல்கர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் ஆவார். தந்தை போல், அவரால் பெரிய தாக்கத்தை இதுவரை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், திறமை வாய்ந்த ஆல்ரவுண்டராக வலம் வருகிறார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன், கடந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குக் குறைந்தபட்ச விலைக்கு வாங்கப்பட்டார். இந்த சீசனில் இவருக்கு விளையாட வாய்ப்பில்லை. ஐபிஎல் வாழ்க்கையில் மும்பை இந்தியன்ஸுக்காக 5 போட்டிகளில் 9.36 எக்கானமி விகிதத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

"நான் எனது ஆர்வத்துக்காக கிரிக்கெட் விளையாடுகிறேன். யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. கடினமாக உழைத்து, என் விளையாட்டை ரசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்" என்று அர்ஜுன் சமீபத்தில் தெரிவித்தார்.

முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அர்ஜுன் டெண்டுல்கருக்கு லக்னோ அணியின் விளையாடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம் என தன் யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார். "அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடவே மாட்டார், அதை பற்றி பேசத் தேவையில்லை. மயங்க் யாதவ், மோஷின் கான், ஆவேஷ் கான், முகமது ஷமி போன்ற பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளதால் இது மிகவும் கடினம்" என்றார் அஸ்வின்.
அர்ஜுனுக்குப் பயிற்சி அளித்த முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங், அஸ்வின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். "இந்த அஸ்வின் யார், இவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்குத் தெரிய வேண்டும். தொலைக்காட்சியில், 'இவர் இதைச் செய்ய முடியாது, அதைச் செய்ய முடியாது' என்று ஒருவர் பேசுகிறார்.

நீங்கள் யார்? நீங்கள் எவர்?" என்று அளித்த பேட்டியில் யோக்ராஜ் கேட்டார்.நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இச்சூழலில் அர்ஜுனின் அறிமுக எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.