பெங்களூர்: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கோவா மாநில அணிக்காக ஆடிய போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தி மிரட்டி இருக்கிறார். கர்நாடகா மற்றும் கோவா அணிகளுக்கு இடையே ஆன நட்பு ரீதியிலான முதல் தர டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் கோவா அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்கினார்.
கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வந்தார். ஆனால், அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். தனக்கென தனி அடையாளம் வேண்டும் என போராடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் கர்நாடகா அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசி விக்கெட் வேட்டையாடி இருக்கிறார்.

அவர் முதல் இன்னிங்க்ஸில் 13 ஓவர்கள் பந்து வீசி 41 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதை அடுத்து கர்நாடக அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய கோவா அணி 413 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் தேஜ்ரானா 109 ரன்களும், மந்தன் குத்கர் 69 ரன்களும் குவித்தனர். முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் முன்னிலை பெற்றது கோவா அணி.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய கர்நாடகா அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் அர்ஜுன் டெண்டுல்கர் 13.3 ஓவர்கள் பந்து வீசி 46 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்தி இந்த போட்டியில் கோவா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
இதை அடுத்து அர்ஜுன் டெண்டுல்கர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். எனினும், அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி, விக்கெட்களை வீழ்த்தாததால் அவருக்கு மாநில அளவில் கூட முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த செயல்பாட்டால் அவர் விரைவில் இந்தியா ஏ அணியில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் மும்பை அணியில் குறைந்த வயது பிரிவுகளில் ஆடி வந்தார். எனினும் மும்பை சீனியர் அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதனால், கோவாவுக்கு மாறினார். அவர் கோவா மாநில அணியில் தற்போது இடம் பெற்று ஆடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசி மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். தற்போது 13 முதல் தர போட்டிகளில் அர்ஜுன் டெண்டுல்கர் 21 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 24 வயது ஆகும் அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக பந்து வீசி வருவதால் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.