டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முகமது ஷமி உட்பட 26 வீரர் - வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது.
பாட்மிண்டன் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் சாங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டிக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால் விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியதில் பெரும் பங்கு வகித்தவர் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி. 33 வயதான அவர் 2023 உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 24 விக்கெட்களை வீழ்த்தினார். அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார் ஷமி. இத்தனைக்கும் மற்ற பந்துவீச்சாளர்கள் அவரை விட அதிக போட்டிகளில் ஆடி இருந்தார்கள்.
2023 உலகக்கோப்பை மட்டுமின்றி வேகப் பந்துவீச்சில் முகமது ஷமி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். தற்போது உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களை பட்டியலிட்டால் அதில் ஷமி முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெறுவார். ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் தற்போது உள்ள வேகப் பந்துவீச்சாளர்களில் ஷமி தான் முதன்மையானவர்.
முகமது ஷமியின் உலகக்கோப்பை ஆட்டம் காரணமாக அவரது பெயரை 2023 ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ கிரிக்கெட் என்ற விளையாட்டுப் பிரிவின் கீழ் பரிந்துரை செய்தது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு விருதை உறுதி செய்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், 9ஆம் தேதி அன்று ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் முகமது ஷமி அர்ஜுனா விருதை பெறுவார்.