மும்பை: இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுகத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்திருந்தும், ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அர்ஷ்தீப் சிங்கை ஒரு மாற்று பந்துவீச்சாளராகவே பார்க்கிறார். இந்த நிலையில், தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டதால் அர்ஷ்தீப் சிங் பொறுமையிழந்து காணப்பட்டதாக அவரது பஞ்சாப் அணி பந்துவீச்சுப் பயிற்சியாளர் ககன்தீப் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 63 போட்டிகளில் 99 விக்கெட்டுகளையும், 9 ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப், இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்திலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த ககன்தீப் சிங், "சில மாதங்களுக்கு முன்பு அவர் இங்கிலாந்தில் இருந்தபோது, அவரிடம் பேசினேன். தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் மிகவும் பொறுமையிழந்து காணப்பட்டார். நான் அவரிடம், 'உனக்கான நேரம் வரும் வரை நீ காத்திருக்க வேண்டும்' என்று மட்டும் கூறினேன்.
உண்மையில், அவர்கள் அர்ஷ்தீப்பை இங்கிலாந்தில் விளையாட வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒரு ஸ்விங் பந்துவீச்சாளர், நல்ல உயரமும் கொண்டவர், எல்லாம் அவருக்குச் சாதகமாக இருந்தது," என்று கூறினார்.
மேலும் அவர், "அணியின் காம்பினேஷன் குறித்து எனக்குத் தெரியாது. ஒருவேளை பயிற்சியாளர் (கௌதம் கம்பீர்) மற்றும் கேப்டன் (சுப்மன் கில்) ஆகியோருக்கு அவர் மீது முழு நம்பிக்கை இல்லாததாலோ இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்," என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ககன்தீப், "அவர் தனது ஸ்விங் மற்றும் துல்லியத்தில் இன்னும் கவனம் செலுத்தினால், ஒரு சிறந்த பந்துவீச்சாளராக வர முடியும். சமீபத்திய போட்டிகளில் நான் கவனித்த வரையில், அவர் தனது லைன் அண்ட் லென்த், யார்க்கர்கள் மற்றும் குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் பயனுள்ள ஆயுதமான பவுன்சர்களில் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக, அர்ஷ்தீப்பின் சிறுவயது பயிற்சியாளரான ஜஸ்வந்த் ராயும், அர்ஷ்தீப் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தயாராகிவிட்டதாகக் கூறியிருந்தார். "ஒரு கிரிக்கெட் வீரரின் உச்சபட்ச கனவு, நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதுதான். அர்ஷ்தீப் இப்போது அதற்கு தயாராகிவிட்டார் (பழுத்துவிட்டார்). அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இங்கிலாந்திலேயே வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், வேறு எங்குதான் கொடுப்பது?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த பேட்டிகள், டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க அர்ஷ்தீப் சிங் எவ்வளவு ஆவலுடன் இருக்கிறார் என்பதையும், கவுதம் கம்பீர் அவரை ஓரங்கட்டி வைத்து இருப்பதையும் காட்டுகிறது. இனி வரும் டெஸ்ட் தொடர்களிலாவது அர்ஷ்தீப் சிங் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறுவாரா?