மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங், இன்னும் தனது முதல் டெஸ்ட் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், இந்தியாவின் டெஸ்ட் பவுலர்களிடம் இருந்து ஏற்கனவே பாடங்களைக் கற்று வருகிறார். இங்கிலாந்தில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது அணியுடன் பல மாதங்கள் இருந்தது, தமக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது என்றும் ஆர்ஸ்தீப் கூறியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்ற 2 போட்டியிலும், சிராஜ் வேகப்பந்து வீச்சை வழிநடத்தி முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக மாறினார்.

இது குறித்து பேசிய ஆர்ஸ்தீப், "டெஸ்ட் கிரிக்கெட் ஒரு நாள் சலிப்பாக இருக்கும் நேரம் வரும். மதிய உணவுக்குப் பிறகு நடக்கும் செஷனில் பந்து எதுவும் செய்யாது. அப்படிப்பட்ட நேரத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இது குறித்து நான் முகமது சிராஜிடம் பேசினேன்.
"அவர் என்னிடம், எதுவும் நடக்காதபோது, அந்த கட்டத்தை நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள் என்பது சிவப்பு பந்து கிரிக்கெட்டில் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறினார். அவர் எனக்கு இந்த சிறிய ஆலோசனையை வழங்கினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நீங்கள் விளையாடாதபோது, உங்கள் எல்லைகளைத் தாண்ட முயற்சிக்கிறீர்கள்."
"பயிற்சி கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். விளையாடாதபோது நீங்கள் அதிக வேலை செய்ய வேண்டும். அதிக ஓவர்கள், அதிக வலிமை பயிற்சி, அதிக பயிற்சி, இதனால் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், நீங்கள் தயாராகவும், முழு உடற்தகுதியுடனும் இருக்க முடியும். நான் பயிற்சியில் எத்தனை ஆயிரம் பந்துகளை வீசியிருப்பேன் என்று தெரியவில்லை."
"பந்து வீச்சில் எந்தக் குறையும் இல்லை. நான் எனது பணிச்சுமையை சரியாக நிர்வகித்தேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் தயாராக இருப்பதே குறிக்கோள். கடைசி டெஸ்ட் முடிந்தவுடன், நான் வெள்ளைப் பந்துடன் பயிற்சி செய்யத் தொடங்கினேன். இடையில் துலீப் டிராஃபி போட்டி இருக்கும் என்று தெரியாது. நாள் முடிவில், சிவப்பு பந்து, வெள்ளைப் பந்து அல்லது இளஞ்சிவப்பு பந்து, நீங்கள் கிரிக்கெட் விளையாடி, அதை ரசிக்க வேண்டும்," என்று ஆர்ஸ்தீப் கூறினார். இந்தியாவின் அடுத்த திட்டமாக ஆசிய கோப்பை இருக்கும் நிலையில், பும்ராவுடன் ஆர்ஸ்தீப் இணைய உள்ளார்.