மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்ஷ்தீப் சிங், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டி கிரிக்கெட் ஆடிய கென்ட் மைதானத்திற்கு தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறார். இங்கிலாந்து ஆடுகளத்தில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவார்கள் என்பதால், ஆர்ஷ்தீப் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி, ஜூன் 13 முதல் கென்ட் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நான்கு நாள் பயிற்சிப் போட்டியில் பங்கேற்கவுள்ளது. "இன்றைய பயிற்சியில், எனது ஒரே நோக்கம் ரிதத்தை உணர்வதாக இருந்தது. உடல் எவ்வாறு செயல்படுகிறது, சிவப்பு பந்து கையில் இருந்து எவ்வாறு வெளியேறுகிறது என்பதை உணர்வது முக்கியம்."

"ஏனெனில், நாங்கள் அனைவரும் வெள்ளைப் பந்துடன் நீண்ட நாட்களாக விளையாடி வருகிறோம்.இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடரை முன்னோக்கி செல்லும்போது, படிப்படியாக பயிற்சியின் தீவிரத்தை அதிகரிப்போம். இதனால், பேட்ஸ்மேன்களுக்கு பந்தை எதிர்கொள்வது மேலும் கடினமாக இருக்கும்,"
"பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசுவது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் மிகவும் ஒழுங்காக ஆடினர். மேலும் ரிதத்தை கண்டறிவதற்காக பயிற்சி செய்தாலும், அவர்கள் முழு போட்டி மனப்பான்மையுடன் ஆடினர். இது பயிற்சியை இன்னும் சுவாரஸ்யமாக்கியது. அவர்களை வீழ்த்துவதற்கு எங்களுக்கு திடமான திட்டங்கள் தேவைப்பட்டன."
"முதல் முறையாக அணியில் இணைந்த சாய் சுதர்சன் மிகவும் ஒழுங்காக ஆடினார். கேப்டன் ஷுப்மன் கில் நல்ல டச்சில் இருந்தார். இனி வரும் காலங்களில் மேலும் முன்னேறி, அவர்களை அடிக்கடி வீழ்த்த முயற்சிப்பேன். நான் பந்தை கையில் எடுக்கும்போது, நானே சிறந்தவன் என்று எப்போதும் உணர்கிறேன். ஆனால், ஜஸ்பிரீத் பும்ரா போன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும்போது, ஒப்பீடு என்ற வார்த்தைக்கே இடமில்லை."
"எனவே, ஒருவருக்கொருவர் திறன்களை மேம்படுத்துவது, அணிக்கு உதவுவது எப்படி என்பதே எங்கள் கவனம் இருக்கும். கெண்ட்க்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு இரண்டு மாதங்கள் செலவிட்டதால், ஒரு வீட்டைப் போன்ற உணர்வு கிடைக்கிறது. இங்கு மேலும் பல நினைவுகளை உருவாக்க ஆவலாக உள்ளேன்."
"இது ஒரு அமைதியான இடம், மக்கள் கூட்டம் குறைவு. மன அமைதி தேவைப்படுபவர்களுக்கு இது சிறந்த இடம். குளிர்ந்த காற்று, மென்மையான வெயில், இதில் ஒரு சூடான சாக்லேட் குடிப்பது தனி சுகம். இனிப்பு பிரியர்கள் என்றால், சுர்ரோஸுடன் அதை அனுபவிக்க வேண்டும்," என்று அர்ஷ்தீப் கூறினார்.