Arun Jaitley : டெல்லி வீரர்கள் இந்தியாவுக்கு ஆட முடியாமல் இருந்தது, அதை மாற்றியது அவர் தான் - சேவாக்
Recommended Video
டெல்லி : முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார். அவர் டெல்லி கிரிக்கெட் வீரர்களுக்கு உதவியதை நினைவு கூர்ந்து இருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.
முன்னாள் நிதி அமைச்சரும், பாஜக கட்சியின் முக்கிய தலைவருமான அருண் ஜேட்லி சனிக்கிழமை அன்று காலமானார். அவருக்கு வயது 66 ஆகும்.
கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பல பணிகள்
மறைந்த அருண் ஜேட்லி அரசியல் மட்டுமின்றி பல பணிகளில் ஈடுபட்டு இருந்தார். அடிப்படையில் வழக்கறிஞராக இருந்தாலும், அரசியல் தாண்டி கிரிக்கெட் மீது அவருக்கு தனி விருப்பம் இருந்தது.

டெல்லி கிரிக்கெட் அமைப்பு
டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் நீண்ட காலம் இருந்த அருண் ஜேட்லி, ஏதோ ஒரு வகையில் டெல்லி கிரிக்கெட் அமைப்புடன் தொடர்பில் இருந்தார். அவரது காலத்தில் தான் டெல்லி கிரிக்கெட் பெரும் வளர்ச்சி பெற்றது என பல கிரிக்கெட் வீரர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

சேவாக் பதிவு
இந்திய அணியில் முன்னணி வீரராக வந்த வீரேந்தர் சேவாக், மறைந்த அருண் ஜேட்லிக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இதைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். டெல்லி வீரர்கள் வாய்ப்பு பெறாமல் இருந்த போது ஜேட்லி தான் உதவினார் என குறிப்பிட்டு உள்ளார்.
சேவாக் வருத்தம்
அருண் ஜேட்லி அவர்கள் மறைந்தது வலியை கொடுத்துள்ளது. பெரும் அரசியல் வாழ்க்கையை தாண்டி டெல்லி வீரர்கள் பலர் இந்திய அணிக்கு ஆடியதில் பெரும் பங்கு வகித்தார். முன்பு ஒரு சமயம், டெல்லி வீரர்கள் உயரிய இடத்தில் வாய்ப்பு பெற முடியாத நிலை இருந்தது.
வாய்ப்பு கிடைக்க காரணம்
ஆனால், டெல்லி கிரிக்கெட் அமைப்பில், அவரது தலைமையின் கீழ் நான் உட்பட, பலரும் வாய்ப்பு பெற்று இந்திய அணிக்காக ஆடினோம். அவர் வீரர்களின் தேவை என்ன என்பதை கேட்பார். பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். தனிப்பட்ட முறையில் அவருடன் நல்ல அழகான உறவில் இருந்தேன். அவரது குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள் என தெரிவித்துள்ளார் சேவாக்.


Click it and Unblock the Notifications