29ம் தேதி துவக்கம்
கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த தொடர் இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த தொடரில் அதிகமாக பணம் புழங்குவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பரிசுப்பணமும் மிக அதிகமாக இருந்து வந்தது.
பிசிசிஐ அதிரடி முடிவு
கடந்த ஆண்டுவரை தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டு வந்த நிலையில், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த ஆண்டு முதல் அதை 10 கோடியாக குறைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஐபிஎல் அணிகள் விளம்பரம் உள்ளிட்டவை மூலம் அதிக தொகையை ஆண்டுதோறும் சம்பாதித்துவரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பாதியாக குறைப்பு
இதனிடையே ஐபிஎல் தொடரில் ரன்னர் -அப்பாக வரும் அணிக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகையும் 12.5 கோடி ரூபாயிலிருந்து 6.5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் 2 அணிகளுக்கு 4.3 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிசினஸ் கிளாஸ் விமான பயணங்கள் ரத்து
இதேபோல பிசிசிஐயின் நடுத்தர ஊழியர்கள் இதுவரை ஆசிய நாடுகளான இலங்கை, வங்கதேசம் அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்கு பிசினஸ் கிளாஸ் விமானப் பயணங்களை அனுபவித்து வந்த நிலையில், தற்போது இது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுபோன்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை பிசிசிஐ தொடர்ந்து எடுக்கும் என்று தெரியவருகிறது.