கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் 8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக துவங்கியது.
8வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி துவக்கவிழா கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு நடப்பதாக இருந்தது. ஆனால், திடீரேன மழை குறுக்கிட்டதால் விழா 9.00 மணிக்கு துவங்கியது.
இம்முறை முதல் முறையாக 8 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், ஐ.பி.எல். கோப்பையை கொண்டு வந்து, 8வது தொடர் தொடங்கி விட்டதாக அறிவித்தார்.

துவக்க விழாவில், ஒவ்வொரு அணியின் கேப்டன்களும் மைதான மேடையில் வைக்கப்பட்டிருந்த பேட்டில் தங்களது கையெழுத்துக்களை இட்டனர். பின்னர் ஐபிஎல் கோப்பையுடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்ற நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரின் கண்கவர் நடனம் இடம் பெற்றது.

நடிகர்கள் சைப் அலி கான், பர்ஹான் அக்தர், இசையமைப்பாளர் பிரிதம் ஆகியோர் இணைந்து வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.