மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கினார். இதனை விசாரிக்க பிசிசிஐ முடிவு செய்த போது, தானாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் இந்திய அணிக்கான தேர்வு குழு தலைவர் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது. இதன் காரணமாக இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் செயல்பட்டு வந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை கூட சிவசுந்தர் தாஸ் தலைமையிலான தேர்வு குழுவே தேர்வு செய்தது.

அதுமட்டுமல்லாமல் அணித் தேர்வுக்கு பின் செய்தியாளர்களை கூட சந்திக்காமல் தேர்வு குழுவினர் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் தேர்வு குழு தலைவருக்கான இடத்தை நிரப்பும் பணியை பிசிசிஐ மேற்கொண்டது. அப்போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தேர்வு குழு தலைவராக செயல்பட அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகியது.
அதற்கு தேர்வு குழு தலைவருக்கு கொடுக்கப்படும் ஆண்டு வருமானமே காரணமாக பார்க்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் பணியாற்ற முன்னாள் நட்சத்திர வீரர்கள் தயாராக இல்லை. இந்த நிலையில் தேர்வு குழு தலைவருக்கான நேர்காணலில், அஜித் அகர்கர் புதிய தேர்வு குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் 3 மாதங்களில் உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளதால், அஜித் அகர்கர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் அஜித் அகர்கருக்கான சம்பளத்தை பிசிசிஐ உயர்த்தி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, ரூ.3 கோடியாக பிசிசிஐ அஜித் அகர்கருக்கு வழங்க முன் வந்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் வருங்காலத்தில் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் பலரும் தேர்வு குழு பொறுப்புக்கு வர முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2 மடங்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.