சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 3வது வாரத்தின் இறுதியில் தொடங்க வாய்ப்புகள் உள்ளதால், சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் பிப்ரவரி மாத இறுதியிலேயே தொடங்கும் என்று தகவல் வெளி வந்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் 5வது முறையாக கோப்பையை வென்று சிஎஸ்கே சாதனை படைத்தது. கடந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணி எங்கு சென்றாலும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் நேரடியாக வந்து மஞ்சள் ஜெர்சியை அணிந்து தோனிக்கு ஆதரவளித்தனர்.

ரசிகர்களின் அளவிட முடியாத அன்பால் நெகிழ்ந்த தோனி, மீண்டும் ஒரு சீசன் விளையாட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார். சிஎஸ்கே அணி தோனியை மீண்டும் தக்க வைத்து கொண்டதன் மூலமாக தோனி இந்த சீசனில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அதேபோல் அடுத்த சீசனுக்கு முன் மெகா ஏலம் நடப்பதால், தோனிக்கு இதுவே கடைசி சீசனாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி வரை நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், முன்னதாக ஐபிஎல் தொடரை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்காக ஐபிஎல் நிர்வாகக் குழு காத்திருக்கிறது.
கிட்டத்தட்ட மார்ச் 22ஆம் தேதி தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமை பிப்ரவரி கடைசி வாரத்திலேயே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்திய அணிக்கு விளையாடும் போது தோனி சில வாரங்களுக்கு முன்னதாக தான் சென்னைக்கு வருவார். ஆனால் சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்கு பின், ஒரு மாதத்திற்கு முன்பாகவே குடும்பத்தினருடன் சென்னை வந்துவிடுவார் தோனி.
மாலை நேரங்களில் வலைப்பயிற்சி, விளம்பர நிறுவனங்களுக்கான படப்பிடிப்பு, விளம்பர நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் என்று தோனி அனைத்து பணிகளையும் முன்னதாக முடித்து கொடுத்துவிடுவார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடருக்காக பிப்ரவரி கடைசி வாரத்திலேயே தோனி சென்னை வருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஏற்கனவே பயிற்சியை தொடங்கியுள்ள தோனி, சக வீரர்களுடன் விரைவில் பயிற்சியை தொடங்குவார். இம்முறையும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி கூடுதல் நாட்கள் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
ரஞ்சி டிராபி தொடரின் லீக் சுற்று போட்டிகளும் பிப்.27ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் மார்ச் முதல் மாதத்திற்குள் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாத வீரர்கள் சிஎஸ்கே பயிற்சி முகாமிற்கு வந்துவிடுவார்கள் என்று பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் வழக்கத்திற்கு முன்பாக ஐபிஎல் திருவிழா தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.