மும்பை: அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் செலவு செய்யப்படும் பர்ஸ் தொகையில் மாற்றம் செய்ய ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உலகக்கோப்பைத் தொடருக்கு பின்னரே தேதி மற்றும் இடம் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த முறை ஐபிஎல் மினி ஏலம் கொச்சியில் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை மும்பை, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்கள் பரிசீலனையில் உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஐபிஎல் மினி ஏலத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்திற்காக அணி நிர்வாகங்கள் செலவு செய்யவுள்ள தொகையில் கூடுதலாக ரூ.5 கோடி சேர்க்க ஐபிஎல் நிர்வாகக் குழு திட்டமிட்டு வருகிறது. கடந்த மினி ஏலத்தின் போது ரூ.95 கோடி வரை செலவு செய்ய அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த தொகையிலேயே ரீ-டெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் தொகை வரவு வைத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ.5 கோடிக்கு அனுமதி வழங்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மினி ஏலத்தில் சாம் கரண் அதிகபட்சமாக ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். அதேபோல் ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி பென் ஸ்டோக்ஸை வாங்கியது. தற்போது ஏலத்தொகை அதிகரிக்கப்படும் நிலையில், சென்னை அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ரூ.6.50 கோடிக்கு வாங்கப்பட்ட அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்துள்ளார். அந்த தொகையுடன் விடுவிக்கப்படும் வீரர்களுடன் ரூ.5 கோடியும் இணையும் பட்சத்தில், சென்னை அணியால் நட்சத்திர வீரர்களையும் ஏலத்தில் வாங்க முடியும்.
ஒருவேளை தோனியும் ஓய்வை அறிவித்தால், சிஎஸ்கே அணியின் பர்ஸில் மேலும் ரூ.12 கோடி இணைக்கப்படும். இதன் காரணமாக அடுத்த ஏலத்தில் களமிறங்கும் புதிய வீரர்களும், அனுபவ வீரர்களையும் இப்போதே சென்னை ரசிகர்கள் கன்வைக்க தொடங்கிவிட்டனர். அதேபோல் ஐபிஎல் மினி ஏலத்திற்கு பல்வேறு அணிகளும் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே பயிற்சியாளர்களை மாற்ற ஏராளமான அணிகள் முடிவெடுத்துள்ள நிலையில், அடுத்ததாக விடுவிக்கப்படும் வீரர்கள் பற்றிய பட்டியலையும் தயார் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.