மும்பை: ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை செப்.2ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இதனால் நாளுக்கு நாள் ஆசியக் கோப்பைத் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடரில் குரூப் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பின்னர் சூப்பர் 4 சுற்று நடத்தப்பட்டு கடைசியாக இறுதிப்போட்டி நடத்தப்படவுள்ளது.

இதனால் பாகிஸ்தான் அணியை இந்தியா 3 முறை எதிர்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் சிறப்பு பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளனர். இந்த பயிற்சி முகாம் ஆகஸ்ட் 23ல் தொடங்கி ஆகஸ்ட் 28 வரை நடக்கவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் அனைத்து வீரர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பயிற்சி முகாம் நடப்பதால், அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கு விவிஎஸ் லக்ஷ்மண் பயணிக்கவில்லை.
ஆனால் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அந்த அணியில் காயமடைந்துள்ள கேஎல் ராகுல் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேபோல் பேக் அப் விக்கெட் கீப்பர் யார்?, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யார்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி வரும் 21ஆம் தேதி இரவு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியக் கோப்பைக்கான அணித் தேர்வு கூட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார். அதேபோல் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான கேஎல் ராகுல் முழு ஃபிட்னஸையும் எட்டியுள்ளார். இதனால் கேஎல் ராகுலின் தேர்வு குறித்தும் நீண்ட ஆலோசனை நடத்தப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் முழுமையாக குணமடையாததால், அவரது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிய திலக் வர்மாவையும் ஆசியக் கோப்பையில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக்கோப்பைத் தொடரிலும் இருக்கும் என்பதால், எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.