பர்மிங்காம் : ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி செய்வது அறியாமல் தடுமாறி வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் என்றால் பொறுமையாக விளையாட வேண்டும் என்ற இலக்கணத்தை பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்குல்லம் ஜோடி மாற்றி வருகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி, மக்களை ஈர்க்கும் இந்த புதிய முறை பேர் பேஷ்பால் என்று ரசிகர்களும் அழைத்து வருகிறார்கள்.

இதற்காக , இங்கிலாந்து அணி நிர்வாகம் ஆடுகளத்தை பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்க கூறி இருந்தனர். அதற்கு ஏற்றார் போல், ஆடுகளத்தில் ஒரு புற்களை கூட 22 அடி பிட்சில் காண முடியவில்லை. இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன் ஷாக் கிராலி , பாட் கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரிக்கு விரட்டி ஆச்சரிய தொடக்கத்தை ரசிகர்களுக்கு அளித்தார்.
இதே போன்று முன்னணி பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டின் முதல் பந்திலும் பவுண்டரிக்கு சென்றது. இதனைத் தொடர்ந்த ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவார்களோ, அதே போல், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகரித்தது.
பென் டக்கட் 12 ரன்களில் வெளியேறினாலும், இங்கிலாந்து தங்களுடைய ஆட்டத்தின் போக்கை கொஞ்சம் கூட மாற்றிகொள்ளவில்லை. இதனால் 10.4வது ஓவரில் எல்லாம் இங்கிலாந்து அணி 50 ரன்களை கடந்தது. இதே போல் போப் 31 ரன்களில் வெளியேற, ஷாக் கிராலி 56 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 20.2வது ஓவரில் எல்லாம் 100 ரன்களை கடந்தது.
சிறப்பாக விளையாடிய ஷாக் கிராலி 73 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் நாள் மதிய நேர உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டு இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் இந்த வேகத்தை பார்த்தால், முதல் நாஙள முடிவில் 400 ரன்களை எடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.