லீட்ஸ் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் இன்று தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஆசஸ் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் இன்று தொடங்கியது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் பாரிஸ்டோவை ஓவர் முடிந்தவுடன் அலெக்ஸ் கெரி ரன் அவுட் செய்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஏமாற்றி வெற்றி பெற்றதாக பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இது ஸ்மித்துக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாகும். இந்த நிலையில் களத்திற்கு ஸ்மித் வந்தபோது ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி அவரை அவமானப்படுத்தினர். எப்போதும் நூறாவது டெஸ்ட் என்ற மைல் கல்லை எட்டும் போது வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படும்.
ஆனால் ஸ்மித்துக்கு நேர்மாறான வரவேற்பு கிடைத்தது. எனினும் அதனை பெரிசாக கண்டுகொள்ளாத ஸ்மித் பேட்டிங்கில் வழக்கம் போல் கவனம் செலுத்தினார். இங்கிலாந்து வீரர்கள் இந்த டெஸ்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஸ்மித் கொஞ்சம் தடுமாறினார். இந்த நிலையில் பிராட் வீசிய பந்தை ஸ்மித் 22 ரன்கள் எடுத்திருந்தபோது அடிக்க முயன்று கேட்ச் ஆனார். இதற்கு நடுவர் அவுட் கொடுக்க ஸ்மித் drs முடிவை எடுத்தார்.
ஆனால் ரிப்ளேவில் அது க்ளியர் அவுட் என தெரிந்தது. பேட்டில் பட்டு தான் பந்து சென்றது உறுதியானதால், நடுவர் இதற்கு அவுட் வழங்கினார். எனினும் ஸ்மித் இதனை ஏற்றுக் கொள்ளாதபடி தலையை ஆட்டிக்கொண்டே பெவிலியன் சென்றார். அப்போது இங்கிலாந்து ரசிகர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
மேலும் சமூக வலைத்தளத்திலும் ஸ்மித்தை ஏமாற்றுக்காரர் என்று கூறி ரசிகர்கள் அவருக்கு எதிராக ட்ரெண்ட் செய்து வந்தனர். பேட்டில் பந்து பட்டு அவர் அவுட் ஆனது தெரிந்தும் வேண்டுமென்று டிஆர்எஸ்ஐ ஸ்மித் பயன்படுத்தியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டிஆர்எஸில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு தமக்கு சாதகமாக முடிவு வரலாம் என்பதற்காகத்தான் ஸ்மித் இப்படி செய்தார் என்றும் அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.